

காலை நேர வெயில் தாழ்வாரத்தில் நீண்டு பரவியிருந்தது. இன்னும் சுள்ளென்று உடம்பில் குத்துகிற மாதிரி சூடு ஏறவில்லை. மாதவன் வீட்டு வேலைக்காரி காவேரி பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தாள். மாதவனின் மனைவி பர்வதம் அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள். அதை வாங்கி கீழே வைத்து விட்டு, அவளை பார்த்தான். அவளும் என்ன என்பதுபோல் தலை ஆட்டினாள்.
"காவேரியிடம் இன்று சொல்லிவிடலாமா?"
"அவள் வேலை முடிஞ்சு, வீட்டுக்கு போகும் போது சொல்வோமே."
"சரி... சரி..." என்று மாதவன் தலை அசைத்துவிட்டு, காபியை குடித்துக் கொண்டே... அன்றைய செய்திதாளை பிரித்து படிக்க ஆரம்பித்தான்.
பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த காவேரி, அவர்கள் பேசியது தன்னை பற்றிதான் என்று புரிந்து கொண்டாள். மனசு இனம் புரியாமல் தவித்தது. அவள் கடந்து வந்த வாழ்க்கையின் நினைவுகள், அப்போது கடலலைகள் போல் அலை மோதின.... அவளது எண்ணங்கள் பேசின...
கல்யாணம் செய்து கொண்ட நாள் முதல் கணவர் நடேசன் எனக்கு பக்கபலமாக இருந்தான். கல்யாணம் செய்து இரண்டு வருடங்கள் கழித்து மகனும் பிறகு மகளும் பிறந்தார்கள். கணவருக்கு நிறந்தர வேலை இல்லை. தினக்கூலி வேலை. கஷ்டப்பட்டு உழைத்து அலுப்புடன் வீட்டிற்கு வருவான். ஆனாலும் என்னிடத்திலோ அல்லது குழந்தைகளிடத்திலோ அதனை வெளிக்காட்டாமல், வேதனைகள் அனைத்தையும் மெளனத்தில் அடக்கிக் கொள்வான். குடும்பத்தில் கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைத்துவிட்டால், என்போன்ற நடுத்தர குடும்பத்தில் எற்படும் பிரச்சனைகளும் கவலைகளும் வெயில் பட்ட பனிபோல் மறைந்துதானே போகும். அப்படித்தான் எங்கள் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால்...