

"தாய்க்குப்பின் தாரம்!" இந்த வசனத்தை நாம் எல்லோருமே நம் முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். இந்த வசனத்தை அடிக்கடி பெரியவர்கள் ஆண் குழந்தைகளிடம் கூறுவது வழக்கம். அதாவது அவர்களைப் பொறுத்த வரையில் ஒரு ஆண் மகனை அக்கறையோடும் பாசத்தோடும் பேணிக்காப்பதில் தாய்க்குப் பிறகு அவனுடைய தாரம் அதாவது மனைவி தான்(thaikku-pin-tharam) அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாள் என்பதாகும்.
ஆகவே தான் ஒரு தாயை எப்படி மதிப்பீர்களோ அதே போல மனைவிக்கும் அன்பையும் மதிப்பையும் கொடுத்து பாசத்தோடு அரவணைக்க வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் கருத்தாக இருந்தது.
இந்த வசனத்தை பொருத்தவரையில் ஆண்களுக்கான இன்னொரு கருத்தும் இருக்கிறது. என்னவென்றால் ஒரு மகனையோ அல்லது ஒரு மகளையோ பெற்றெடுப்பது ஒரு தாய் தான்.
ஆண் மகனுக்கு திருமணமான பிறகு அவனுடைய வாரிசை சுமப்பது மனைவியாகிய ஒரு பெண் தான். அதாவது அவனுடைய தாரம் தான் அவருடைய குழந்தையை சுமக்கிறாள். இதையும் மனதில் வைத்துக் கொண்டு தான் தாய்க்குப்பின் தாரம் என்றார்கள்.
மேற்கூறிய அத்தனை கருத்துக்களுமே ஒரு ஆண் மகனை மையமாக வைத்து கூறப்பட்டது. சரி, இப்போது இன்னும் ஒரு முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.. இந்த வசனத்திற்கும் பெண்களுக்கும் தனிப்பட்ட முறையில் என்ன சம்பந்தம் இருக்கிறது?? பார்ப்போமா..
ஒரு பெண்ணிற்கு திருமணமான பிறகு அவள் ஒருவருடைய மனைவியாக அதாவது தாரமாக ஒரு புதிய ரோலை எடுத்துக் கொண்டு அவனுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் செய்கிறாள். குழந்தை பிறக்கும் வரை அவளுடைய இந்த தாரம் என்கிற ரோலின் முக்கியமான கடமை என்னவென்றால் கணவரின் ஆசைகளை பூர்த்தி செய்து சேவை செய்ய வேண்டும் என்பதாகும். குழந்தை பிறந்த பிறகும் முன்பிருந்தபடியே அவளால் கணவருக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.
அப்படி அவள் குழந்தையை விட்டுவிட்டு கணவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கூடாது. ஒரு பெண் தாயான பிறகு அந்தத் தாய் என்கிற ரோலிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தன் குழந்தையை பேணிக் காப்பதில் தான் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
அதற்கு பிறகு தான் கணவனுக்கு சேவை செய்ய வேண்டும். இந்த முக்கியமான விஷயத்தையும் கருத்தில் வைத்துக் கொண்டு தான் தாய்க்கு பின் தாரம் என்று கூறினார்கள்.
முன்னால் கூறிய எல்லா கருத்துக்களையும் விட முக்கியமான கருத்து இந்த கருத்து தான். என்னை பொறுத்தவரையில் இந்த வசனமானது பெண்களை மையமாகக் கொண்டு தான் சொல்லப்பட்டது என கருதுகிறேன்.