நம் உடலில் உள்ள இலவச ஏர்கண்டிஷனர்

ஆரோக்கியம்
நம் உடலில் உள்ள இலவச ஏர்கண்டிஷனர்

ற்போது அதிகரித்து வரும் கோடையில், வெப்பத்தை எப்படி சமாளிப்பது? நாள் முழுக்க மின் விசிறிக்கடியிலோ அல்லது ஏசி ரூமிலோ இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை. பகலில் வெளியே செல்ல நேரிட்டால், வெயிலை எதிர்கொள்ள துணை செய்யும் என நம்பி, விளம்பரங்களில் காட்டப்படும் வியர்க்குருப் பவுடரை வாங்கிப் போட்டுக் கொள்கிறோம். ஆனால் உண்மையில், வியர்க்குருப் பவுடர்கள் நம் உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் துவாரங்களை அடைக்கவே செய்கின்றன.  இதனால் வியர்வை வெளியேற முடியாமல் உள்ளேயே தங்கி உடலின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

இயற்கை நமக்கு தந்திருக்கும் பெரும் கொடை நம் தோல். அது ஒரு ஏர்கண்டிஷனரைப் போல வேலை செய்கிறது. ஒரு ஏ.ஸி மெஷின் எவ்வாறு அறையின் வெப்பத்தை உறிஞ்சி வெளியேற்றி, உள்ளிருக்கும் வெப்பக்காற்றை குளுமையடையச் செய்கிறதோ, அதே போலத்தான் நம் தோலும் வேலை செய்கிறது. நாம் உடற்பயிற்சி செய்யும் போதோ, தகிக்கும் வெயிலில் சென்றாலோ உடலில் சூடு அல்லது வெப்பம் அதிகமாகி, தோலில் உள்ள வியர்வைச் சுரப்புகள் தூண்டப்பட்டு வியர்வை வெளியேறுகிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீரான நிலையில் வைக்கப்படுகிறது. தோலில் இருந்து வியர்வை வெளியேறி ஆவியாகி மறையும்போது, உடலில் குளிர்ச்சியை உணரமுடியும்.

கடுமையான காய்ச்சலின்போது, பாராசிட்டமல் மாத்திரைகளையோ ஊசியோ எடுத்துக்கொள்வோம். உடலில் நீரேற்றம் குறைந்து விட்டது என நோயாளிக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவர். அப்போதெல்லாம் உடலின் வெப்பநிலை உடனே நார்மல் நிலைக்கு வருவதில்லை. உடல் வலியில் புரண்டு புரண்டு படுப்போம். உடல் வேர்த்து விடும் போது தான் உடல் வெப்பநிலை சீராகி காய்ச்சலும் உடல்வலியும் குறைந்து தூக்கம் வரும். 

வீட்டிலோ, அலுவலகத்திலோ ஒரு நிமிட மின்வெட்டைக் கூட நம்மால் தாங்க முடிவதில்லை. ‘’ஐயோ இப்படி வேர்த்துக் கொட்டுகிறதே’’ என புலம்ப ஆரம்பிக்கிறோம். ஒரு நிமிடம் நினைத்துப்பார்க்க வேண்டும். கனமான சீருடையில், சுட்டெரிக்கும் வெயிலையும் சகித்துக் கொண்டு நாள் முழுக்க நடுரோட்டில் நின்று கொண்டு போக்குவரத்தை சரி செய்யும் டிராபிக் போலீஸ்காரர், ஒவ்வொரு தெருவாக நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ தபால் பட்டுவாடா செய்யும் தபால்காரர், ஸ்டாண்டில் காத்துக் கொண்டும், நெரிசலான சாலைகளில் வண்டி ஓட்டிக்கொண்டும் இருக்கும் ஆட்டோகாரர்கள், என்ஜின் சூட்டைப் பொறுத்துக் கொண்டு பஸ் ஓட்டும் டிரைவர்கள், எந்நேரமும் அடுப்புச்சூட்டில் வெந்துகொண்டு சுடச்சுட டீ ஆற்றும் டீ மாஸ்டர்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் வேலை செய்யும் சமையலர்கள் மற்றும் இல்லத்தரசிகள், இவர்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். பல வருடங்களாக அதிகரித்து வரும் வெயிலின் வெப்பத்தை தாங்கிக்கொண்டுதான் இவர்கள் வேலை செய்கின்றார்கள்.

இனி, வெயிலை சபிக்கமாட்டீர்கள் தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com