

குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவி விளையாட்டு. பழங்காலத்தில் குழந்தைகள் வெளியில் ஓடி ஆடி விளையாடும் (Childrens playing games) மைதான விளையாட்டுகளே அதிகமாக இருந்தன. ஆனால், அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் இன்று விளையாட்டின் வடிவத்தையே மாற்றியுள்ளன.
மொபைல் போன், டேப்லெட் போன்ற சாதனங்கள் மூலம் விளையாடப்படும் மொபைல் விளையாட்டுகள் குழந்தைகளின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், மொபைல் விளையாட்டுகளா? மைதான விளையாட்டுகளா? என்ற கேள்வி ஒரு விவாதமாக மாறியுள்ளது.
மைதான விளையாட்டுகள் பாரம்பரியத்தின் பெருமை:
மைதான விளையாட்டுகள் திறந்த வெளியில் குழுவாக விளையாடப்படும் விளையாட்டுகளாகும். கிரிக்கெட், கால்பந்து, கபடி, கோகோ, வாலிபால், ஹாக்கி போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்கள். இந்த விளையாட்டுகள் உடலுக்கு தேவையான உடற்பயிற்சியை அளிக்கின்றன. ஓடுதல், குதித்தல், எறிதல் போன்ற செயல்கள் மூலம் தசைகள் வலுவடைகின்றன. உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
மேலும், மைதான விளையாட்டுகள் குழந்தைகளில் குழு மனப்பான்மை, ஒழுக்கம், நேர்மறை போட்டி மனநிலை, தலைமைத் திறன் போன்ற பண்புகளை வளர்க்கின்றன. வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும், சமூக உறவுகளை வலுப்படுத்தவும், நட்பு வட்டத்தை விரிவுபடுத்தவும் மைதான விளையாட்டுகள் பெரிதும் உதவுகின்றன.
மொபைல் விளையாட்டுகள் நவீன தொழில்நுட்பத்தின் விளைவு:
மொபைல் விளையாட்டுகள் என்பது மொபைல் போன் அல்லது கணினி மூலம் விளையாடப்படும் டிஜிட்டல் விளையாட்டுகளாகும். இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக நேரம் இவ்விளையாட்டுகளில் நேரத்தை செலவிடுகின்றனர். இந்த விளையாட்டுகள் பொழுதுபோக்கையும் மனச் சோர்விலிருந்து தற்காலிக விடுதலையையும் தருகின்றன. சில விளையாட்டுகள் நினைவாற்றல், கணக்குத் திறன், விரைந்து முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிக நேரம் மொபைல் விளையாட்டுகளில் ஈடுபடுவது உடல் இயக்கக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. கண் பாதிப்பு, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் உருவாகின்றன. சமூக தொடர்புகள் குறைந்து, தனிமை உணர்வும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மொபைல் விளையாட்டுகளும் மைதான விளையாட்டுகளும் ஒரு ஒப்பீடு
1. மைதான விளையாட்டுகள் உடல் ஆரோக்கியத்திற்கும் மன வளர்ச்சிக்கும் சமநிலையான பயனை அளிக்கின்றன. மொபைல் விளையாட்டுகள் மன திறனை ஓரளவு வளர்த்தாலும், உடல் இயக்கம் இல்லாததால் முழுமையான வளர்ச்சியை வழங்குவதில்லை.
2. மைதான விளையாட்டுகளில் இயற்கையுடன் இணைந்த அனுபவம் கிடைக்கிறது. மண்ணின் வாசனை, சூரிய ஒளி, நண்பர்களின் குரல் ஆகியவை குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. மொபைல் விளையாட்டுகளில் இது சாத்தியமில்லை. அதே நேரத்தில், மொபைல் விளையாட்டுகளை முறையாகவும் அளவோடும் பயன்படுத்தினால் அவற்றிலும் சில நன்மைகள் உள்ளன. அளவுக்கதிகமான பயன்பாட்டைத் தவிர்ப்பதே இன்றைய தலைமுறையின் பொறுப்பு.
3. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் இணைந்து குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். மொபைல் விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, அவற்றைப் பயன்படுத்தும் நேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதே சமயம், பள்ளிகளில் மைதான விளையாட்டுகளுக்கான வசதிகளை மேம்படுத்தி, குழந்தைகளை வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்.
4. மொபைல் விளையாட்டுகளும் மைதான விளையாட்டுகளும் தத்தம் இடத்தில் பயனுள்ளவையே. ஆனால், மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கு மைதான விளையாட்டுகள் இன்றியமையாதவை. மொபைல் விளையாட்டுகள் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க வேண்டும். வாழ்க்கையின் மையமாக அல்ல. எனவே, திரை முன் சிக்கிக் கொள்ளாமல், மைதானத்தில் மகிழ்ந்து விளையாடுவதே ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான சரியான பாதை.