

1. "அந்தியும் சந்தியும் மஞ்சள் குளிப்பாள்; அடுப்பங்கரையில் படுத்துக் கிடப்பாள்; ஆத்துக்காரி கையாலே உருளுவாள், சும்மா பிரளுவாள்! ஒத்தப் பிள்ளைக்காரி அவள் பெயர் என்ன தாயி?"
விளக்கம்: நம் வீடுகளில் அந்தக்காலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் சமையலுக்காக மஞ்சள் அரைக்கப் பயன்படுவது 'அம்மிக் குழவி' ஆகும். இந்த குழவிதான் 'ஆத்துக்காரி' என்று சொல்லப்படும் வீட்டுக்காரியின் கையால் உருண்டு பிரளும். அம்மியில் அரைப்பதற்கு ஒரு குழவி மட்டுமே இருப்பதால், இதனை 'ஒத்தப் பிள்ளைக்காரி' என்று அழைப்பார்கள்.
2. "மூணு கொண்டை சிலுக்கு; பெத்த புள்ள சிவப்பு; குளிக்கப் போனா கருப்பு; விட்டுவிட்டால் வெளுப்பு! அவை என்ன?"
விளக்கம்: வீடுகளில் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 'மண் அடுப்பிற்கு' மூன்று கொண்டை போன்ற அமைப்புகள் இருக்கும். அந்த அடுப்பில் எரியும் நெருப்பு சிவப்பு நிறத்தில் இருக்கும். சமையல் முடிந்த பிறகு தண்ணீர் ஊற்றி அணைக்கும்போது அது கருப்பாக மாறும். அதையே சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டால், அது வெளுத்த சாம்பலாக மாறிவிடும்.
3. "கறக்காத பாலு; பூக்காத பூவு; சிரைக்காத முடி; செய்யாத பாத்திரம்! அவை என்ன?"
விளக்கம்: நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் தேங்காய்தான் இதற்கான விடை.
கறக்காத பால்: தேங்காயிலிருந்து எடுக்கப்படும் பால்.
பூக்காத பூ: தேங்காய்க்குள் இருக்கும் தேங்காய் பூ (இது செடியில் பூப்பதில்லை).
சிரைக்காத முடி: தேங்காயின் மேல் இருக்கும் நார் (முடி).
செய்யாத பாத்திரம்: தேங்காயின் ஓடான கொட்டாங்குச்சி.
4. "காடும் வெள்ளை காடு; விதையும் கறுப்பு விதை; கையால் இரைத்து, வாயால் பொறுக்கினான்! அவை என்ன?"
விளக்கம்:
வெள்ளை காடு: காகிதம்.
கறுப்பு விதை: நாம் எழுதப் பயன்படுத்தும் கருப்பு மை.
கையால் இரைத்தல்: காகிதத்தில் எழுத்துக்களை எழுதுவது.
வாயால் பொறுக்குதல்: எழுதியவற்றை வாய்விட்டுப் படிப்பது.
இது போன்ற பாரம்பரிய விடுகதைகள் உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் கல்கி ஆன்லைன்க்கு எழுதி அனுப்பலாமே!