

தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை.
தூதுவளை இலை சளி, இருமல், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த மருந்து. இதை ரசம், துவையல், கசாயம் செய்து சாப்பிடலாம்; நெஞ்சு சளியைக் கரைத்து, மூக்கடைப்பை நீக்கி, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இதற்கு இந்த பெயர் வந்ததற்கு பல கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இந்த சுவாரஸ்யமான கதை...
நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாறர், தான் செய்யவிருக்கும் யாகத்தின் பலனை சிவபெருமானுக்கு அளிக்க எண்ணினார். சிவனை வரவழைப்பதென்றால் சாமானியமா? இதற்கு சிபாரிசு இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி, சிவனின் நண்பரான சுந்தரரை பார்க்கச் சென்றார்.
சுந்தரர் எப்போதும் எதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டு கொண்டு இருப்பார். அவரை பார்க்கவே முடியவில்லை. அவரை பார்க்க செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாதே என்பதற்காக, தினமும் வயலில் முளைத்துள்ள தூதுவளை இலையைப் பறித்து வந்து, கறி சமைத்து எடுத்துச் செல்வார்.
சுந்தரரை பார்க்க முடியாவிட்டாலும், அவரது மனைவி பரவை நாச்சியாரிடம் கொடுத்து விட்டு வந்து விடுவார். அம்மையாரும் தருபவர் யாரென்றே தெரியாமலே, அதை சுந்தரருக்கு தினமும் பரிமாறுவார். சுந்தரரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஏதோ ஒரு கீரையை மனைவி சமைத்து போடுகிறாள் என்றே நினைத்து கொண்டார்.
ஒரு நாள் பயங்கர மழையில் சோமாசிமாறரால், நதியைக் கடக்க இயலவில்லை. அன்று, சுந்தரருக்கு கறி கொடுக்க இயலாமல் போனது. சுந்தரர் அன்று மதியம் சாப்பிடும் போது தான், "வழக்கமாக வைக்கும் சுவையான கீரை எங்கே?" என்றார் மனைவியிடம்.
அம்மையார் நடந்ததைச் சொல்ல, "ஐயோ! இப்படி ஒரு விசுவாசம் மிக்கவரை பார்க்காமல் இருந்து விட்டோமே!" என வருத்தம் தெரிவித்தார். பின்னர், இனி அவர் வந்தால், தன்னைப் பார்க்கச் சொல்லும் படி கூறினார்.
சோமாசிமாறரும் சுந்தரரை சந்தித்தார். சுந்தரர் அவருக்காக சிவனிடம் பேசி அவரை யாகத்திற்கு வரும் படி செய்து விட்டார். இறைவனை சந்திக்க அவரது நண்பருக்கு தூது போய் இறைவனையே வளைத்த இலை என்பதால் 'தூதுவளை' என்றாயிற்று என்பது ஒரு கதை
தூதுவளையை மருந்தாக பயன்படுத்த உதவும் பயன்மிகு குறிப்புகள்:
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல், பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து. தூதுவளைக் காயை சமைத்தோ அல்லது வற்றல், செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். தூதுவளைக் கீரை, நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்தும் .