

பெண்கள் முன்னேற்றம் ஏன் இன்னும் முழுமை பெறவில்லை?
இந்த சமுதாயத்தைப் பொறுத்த வரையில் பெண்களுக்கான முன்னேற்றத்திற்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா? இல்லையா?
இதற்கான பதிலை பொதுவாக ஆராய்ந்து பார்த்தால், மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதென்றே சொல்லலாம்.
முன்பெல்லாம் எத்தனை பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலைக்கு சென்றார்கள்? கல்லூரிகளில் ஆண்களுக்கு சமமாக தொழில்நுட்பம் மருத்துவம் போன்றவற்றை எத்தனை பெண்கள் படித்தார்கள்? ஆனால், இன்றைய காலகட்டத்தில் இன்னும் சொல்ல போனால் ஆண்களை விட பெண்கள் தான் எல்லா துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
இவை எல்லாம் பொதுவாக பார்த்தால் தோன்றக் கூடிய முன்னேற்றங்கள். ஆனால் சமுதாயத்தில் இன்னும் சில விஷயங்கள் மாறவில்லை. இதற்கு காரணம் யார்? பார்க்கலாமா... விரிவாக...
பெண்களின் முன்னேற்றத்திற்கும் கருத்திற்கும் தடையாக எதிரியாக இருப்பவர்கள் யாரென்று தெரியுமா உங்களுக்கு??
உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் கணவன் திடீரென இறந்து விடுகிறார் என்று வைத்து கொள்வோம். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. எல்லா குழந்தைகளும் சிறு வயது குழந்தைகள் தான் என்று வைத்து கொள்வோம்.
இப்படி இருக்கும்பட்சத்தில் அந்த மனைவி என்ன செய்வாள்?? நடந்ததை மறந்து விட்டு காரியம் முடிந்த உடனேயே எதாவது ஒரு வேலையை தேடி கொள்வாள்; குழந்தைகளையும் பார்த்து கொண்டு வேலையையும் செய்து கொண்டு எப்படியோ பிழைப்பை ஓட்ட பார்ப்பாள். ஆகவே அவள் கணவன் இறந்த சில தினங்களிலேயே வெளியே வந்து தான் ஆக வேண்டும். இது தான் உண்மை. சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்...
இந்த பெண் ஒரு வாரம் ஆன உடனேயே வெளியே வரும் போது, புருஷன் செத்து ஒரு வாரம் கூட ஆகல, எப்படி மினிக்கிட்டு போறா.. பாத்தியா..
நல்ல காரியத்துக்கு போகும் போது இவள பார்த்துடேனா? கஷ்டம்..
ஏண்டிமா.. அவன் செத்து ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள வேலைக்கெல்லாம் போகனமா??
புருஷன் செத்து போன துக்கமே இல்லை அவ முகத்தில.. பாரு.. புருஷன் செத்து போய்ட்டான், இவ ஓட்டலில் உக்காந்துண்டு சாப்பிடறா..
இப்படி இன்னும் நிறைய வசனங்களை பேசி பெண்களை பின்னே தள்ளுபவர்கள் யார்? நிச்சயமாக இதற்கான பதில் பெண்கள் தான்.
பெண்களுக்கு பெண்களே தான் எதிரிகள்.
பெண்கள் முன்னேற்றம் அடைய நாம் மாற்ற வேண்டிய மனநிலை என்ன?
ஏன் இப்படி? கணவன் இறந்தால் பெண்கள் வெளியே செல்லக் கூடாதா? அவர்களுக்கு பசிக்காதா? அவர்களுக்குரிய வேலையையும் கடமையையும் செய்து தானே ஆக வேண்டும்.
ஒரு பெண்ணின் கஷ்டத்தையோ அல்லது சூழ்நிலையையோ புரிந்து கொள்ளாமல் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதை செய்யலாமா?? அதை செய்யலாமா?? என்று சொல்பவர்களும் இந்த பெண்கள் தானே..
இப்படி பெண்களே பெண்களை புரிந்து கொள்ளவில்லை என்றால் பெண்களின் முன்னேற்றம் எப்படி முழுமை அடையும்??
ஆகவே, நம்மால் சமுதாயத்தை குறை சொல்ல முடியாது. பெண்களே பெண்களை எப்போது மதிக்க ஆரம்பிப்பார்களோ அப்போது தான் பெண்களுக்கு பரிபூர்ண முன்னேற்றமும் சுதந்திரமும் கிடைக்கும்..