சமூகம் மனித இனத்தில் திருமணத்தை ஒருவர் வாழ்வின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கிறது. திருமணம் செய்ய சரியான வயது பெண்ணுக்கு 18 என்றும், ஆணுக்கு 21 என்றும் சட்டம் சொல்கிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு 22 முதல் 25 வயதுக்குள் திருமணங்கள் நடந்து விடும். ஆனால், தற்போதெல்லாம் 30 வயது முதல் 32 வரையாக இது அதிகரித்துள்ளது.
திருமணச்சந்தையில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பது, ஆண்களை விட பெண்கள் படிப்பிலும், வருமானத்திலும் உயர்நிலையில் இருப்பது, அவர்களின் ஜாதக கிரக நிலைகள், தனிப்பட்ட விருப்பங்கள், முதலில் படிப்பு, பின்னர் வேலை, சிறிது காலம் தங்கள் சுதந்திரமான வாழ்க்கை போன்றவை பெண்கள் திருமணத்தை தள்ளிப்போட காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மேலும் பணியிலுள்ள பெண்கள் உறங்குவதில் உள்ள கால மாற்றம், தொடர்ந்து இரவு நேரப்பணி, மகளின் வருமானத்தில் வாழ்ந்து பழகிவிட்ட பெற்றோர்கள், குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொள்ளத் தயங்கும் பெண்கள், உணவுமுறை, அணியும் உடை, தீய நட்பு வட்டாரங்கள், ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஆணாதிக்க குடும்ப வன்முறைகள், பெண்கள் தங்களின் வருமானத்தை கணவனுடைய குடும்பத்திற்கு தருவதில் காட்டும் ஆர்வமின்மை, பெண் சுதந்திரம், கூட்டுக்குடும்பச் சிதைவினால் முறையான வழிகாட்டுதலில் குறைவுபட்ட பெரியவர்களின் ஆதரவு, அனுபவத்தில் அடிக்கடி காணும் அதிக அளவிலான விவாகரத்துகள் போன்றவை பெண்களின் திருமணத்தை தாமதப்படுத்துகின்றன.
மூளைசார் பணியான தகவல் தொழில் நுட்பத்துறையில் இளம்பெண்களின் ஆதிக்கமே அதிகம். குளு குளு அறையில் பணியில் ஈடுபடும் பெண்கள் தங்கள் வாழ்க்கைமுறையை அதற்கேற்றாற் போல் தகவமைத்துக் கொள்கிறார்கள். இவர்களால் பழைய தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்கள் உள்ள கூட்டுக் குடும்பங்களில் வாழ்வதில் பொதுவாக விருப்பம் இருப்பதில்லை.
பணியில் உள்ள பெண்கள் ஓரளவு வாழ்க்கையை அனுபவித்த பிறகு, திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இது அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.
நள்ளிரவு வரை கணினியில் பணிபுரியும் பெண்களுக்கு படுத்தவுடன் உறக்கம் வருவதில்லை. அதிகாலை நேரத்தில்தான் அவர்கள் தூங்கத் தொடங்குகிறார்கள். இதனால், அவர்களின் உடல் நலமும், உள்ள நலமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. விடியற்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, காஃபி போட்டு கொடுக்கும் வேலையெல்லாம் திருமணமான பின்பு, இன்றைய இளம் பெண்களால் ஒரு நாளும் முடிவதில்லை.
இந்நிலையில், பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்து கொள்வதால் வரும் குடும்பப் பொறுப்பைக் கண்டு பயந்து திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். தலைமுறை இடைவெளியால் ஏற்படும் இக்குறைபாடுகளை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
பெண்ணின் திருமண விருப்பத்திற்கேற்ப, திருமணம் செய்து கொள்ள அவளுக்கு பெற்றோர்கள் வாய்ப்பளிக்க வேண்டும். இதன் மூலம் பிற்காலத்தில் அவர்கள் வாழ்வில் சிக்கல்கள் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு அவர்களே பொறுப்பானவர்கள் ஆவார்கள்.
புகுந்த இடத்தில் உள்ள பெரியவர்கள் இவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்காமல் அனுசரித்து நடந்தால் மட்டுமே நிம்மதி சாத்தியம். இல்லை எனில், இருவர் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.
ஒரே குழந்தையாக வளர்ந்து விட்ட இக்காலப் பெண்கள் பெற்றோர் தம்மை நடத்திய வாழ்வியல் அணுகுமுறையை புகுந்த வீட்டிலும் எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமாகாதபோது ஏமாற்றம் அடைகிறார்கள்.
பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் போன்றவை இன்றைய இளம் தலைமுறைப் பெண்களிடம் குறைவாகவே உள்ளது. தங்களது சுகத்தையும், சுதந்திரத்தையும் துளியும்விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராக இருப்பதில்லை.
இதனால் வயதும் இளமையும் பெற்றோரும் போன பின்பு, பாதுகாப்பின்றி அவர்கள் இருக்க நேரிடும். அப்போது அவர்களின் மனம் துணை ஒன்றுக்கு ஏங்கும். ஆறுதலாய் பேச, அரவணைத்து வாழ்க்கையை கொண்டு செல்ல நண்பர்களை தேடி அலையும் போது கிடைத்தால் நலம். ஆனால் அவ்வாறான உறவுகள் கிடைப்பது சந்தேகமே.
தாமதமான திருமணம் நேர்மறையான பக்கத்தில், தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்தவும், இணக்கமான துணையைக் கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு உதவுகிறது. இருப்பினும், தனிநபர்களுக்கு வயதாகும்போது, கருத்தரிப்பதும் குழந்தைகளைப் பெற்று, அவர்களை வளர்ப்பதும் சவாலாகி விடுகிறது. எனவே, அன்பும் அரவணைப்பும் கொடுக்கும் பெற்றோர்கள் இருக்கும் போதே நன்கு யோசித்து தற்காலப் பெண்கள் திருமண உறவில் காலத்தில் இணைவது நல்லது.
ஆண்களோ,பெண்களோ, இனியாவது தங்களது தாமதமான திருமணங்களை தவிர்க்கவேண்டும். இது குறித்த சமூக விழிப்புணர்வு நமக்கு தற்போது மிகவும் தேவை என்பதே கசப்பான ஓர் உண்மை.