-சாந்தி ஜோ
"அம்மா சாரதா ஒருமுறை என்னைய வந்து பார்த்துட்டுப் போ மா" னு தொலைபேசியில் தேம்பி அழுது, நலம் விசாரித்த குரல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மகள் ஜெர்மனியில் செட்டில் ஆகி, தனக்கு பார்க்க முடியாமல் இருக்கிறதே என்பது மட்டும் அம்மா அழுததற்குக் காரணமல்ல.
என் 2வது வருட கல்யாண நாள் அன்றுதான் எனது தந்தை ராஜராமன் அவர்களின் இறந்த நாள். அவர் உயிருடன் இல்லை என்றாலும் இன்றும் எங்கள் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டாரின் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். காரணம் வல்லிபுரம் எனும் எங்களது ஊரில் ஒவ்வொரு தெருவிலும் அவர் நூலகம் அமைத்ததும் அனைவரையும் புத்தகங்கள் வாசிக்க ஊக்குவித்ததுமே. நல்ல புத்தகங்கள் வாசிப்பதினால் மட்டுமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக தெருவுக்கு ஒரு நூலகம் வேண்டும் என்ற முயற்சியில் வெற்றியும் பெற்றார். பண்டிகை காலங்களில் இளைஞர்களுக்கு காந்தி, நேதாஜி, அப்துல் கலாம், டால்ஸ்டாய் புத்தகங்களையும், வரலாற்று நூல்களையும் வாங்கிக் கொடுப்பார்.
புத்தகங்கள் வாசிப்பதில் ஆரம்பத்தில் எனக்கு இருந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமாக அதைவிட்டு செல்போன் மீது சென்றது. அதுவும் சோசியல் மீடியா பக்கம். அதனால் என் தந்தையின் அறிவுரையும் என் புத்திக்கு ஏறவில்லை. முகநூலிலே என் நேரத்தை உலாத்தினேன். காரணம் ரோய் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். முகநூலில் அறிமுகமாகி மெசேஜ் மூலம் பேசிக்கொண்ட நாங்கள் காதல் ஏற்பட்டு திருமணம் வரை வந்துவிட்டோம்.
எனது காதல் விஷயம் அறிந்ததும் என் தந்தை சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனதில் இருக்கிறது. "நீ இப்போது எடுக்கும் முடிவே, உனது பிற்கால எந்த நிலைமைக்கும் காரணமாக அமையலாம். அந்த முடிவுக்கு முன், உன் பழக்க வழக்கங்களும் சிந்தனைகளும் எப்படி இருந்ததோ அதன்படியே உன் முடிவும் சரியா தவறா என்று தீர்மானிக்கப்படும்" என்றார்.
இதெல்லாம் நடந்து நான்கு வருடங்கள் ஆனாலும் என் தந்தை சொன்ன வார்த்தைகளை மறக்க முடியவில்லை. செல்போனிலே உலாவியதால் எனக்கு கிடைத்த அந்தப் பரிசுதான் ஏமாற்றம். நான் நினைத்தபடியே எல்லா வசதிகளும் எனது கணவருக்கு இருந்தாலும் அவருக்கு நான் மூன்றாவது மனைவி என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஏற்கனவே இரண்டு முறை திருமணமான அவர் என்னையும் முகநூலில் ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஜெர்மனிக்கு வந்த பிறகுதான் தெரிய வந்தது. அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்.
தற்கொலைக்கு முயற்சி செய்த நான், அறிவுக்கு மட்டும் அல்ல, சோகம் கவலை, ஏமாற்றம் எல்லாவற்றிற்கும் ஒரே மருந்து புத்தகங்களே எனும் என் தந்தையின் கொள்கையை நினைத்து நினைத்து என்னைத் தேற்றிக்கொண்டேன். தற்போது செல்போனில் சோசியல் மீடியாவின் அளவான பயன்பாடு குறித்தும், புத்தகம் வாசிப்பின் நலனை குறித்தும் மக்களுக்கு ஊக்குவிப் பதையும் இலட்சியமாக கொண்டு செயல்படும் நான், இன்னும் நல்ல புத்தகங்களையும், வரலாற்று நூல்களையும் வாசிக்குமாறும், முக்கியமாக இனி உங்கள் தலைமுறைகளுக்கு வாசிக்க ஊக்குவிக்குமாறும் பாதிக்கப்பட்ட முகநூல் சாரதாவாக பரிந்துரைக்கிறேன்.
பி.கு:- இக்கதை சாரதாபோல வாழ்பவர்களுக்கு அல்ல. முகநூல் சாரதா போல வாழப் போகிறவர்களுக்கானது.