

காதல் தூது - short story
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டங்கள் குறைய ஆரம்பித்த மாலை நேரம்...
கூடலழகர் கோயில் வாசலில், செருப்புகள் யாவும் தத்தம் ஜோடிகளை மாற்றிக் காதலிக்க, தர்ம தரிசன வரிசையில், சில அதர்ம வரிசைப்படி பக்தர்கள் முட்டி முன்னேறினர்.
“ஏங்க, இப்படி அநியாயம் பண்றீங்க? செஞ்ச பாவம் தொலைக்கத் தானே இங்கே வர்றோம், திரும்பவுமா?..” விமலா வேதனையில் இரைந்தாள்.
“என்ன செய்ய? பழகிப் போன குணம், பக்தி வேஷம் போட்டால் மட்டும் மாறுமா?..” பெரியவர் ஒருவர் பட்டெனப் புலம்பினார்.
“நல்லா சொன்னீங்க ஐயா...” என அவரைப் பாராட்டித் திரும்பிய கவிதாவின் பார்வையில், சில வினாடிகள் விமலா நின்று மறைந்தாள்.
அர்ச்சகர் கொடுத்த துளசியைக் கையில் வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு சற்று நகர்ந்த கவிதாவின் மனம், தான் விமலாவைப் பார்த்த காட்சியை மீண்டும் யோசிக்க வைத்தது. அடுத்த ஐவர் நகர்ந்ததும் விமலா வரிசையை விட்டு வெளியே வர, அவள் கண்ணிலும் அதே நட்புணர்வுப் பார்வை!