பறக்கும்  பாவைகள்!

பறக்கும்  பாவைகள்!
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on
எங்களாலும் பறக்க முடியும்.
-ஜி.எஸ்.எஸ்.
பகுதி – 5.

குஞ்சன் சக்சேனா 1994இல் இந்திய விமானப்படையில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதற்கு ஐந்து வருடங்கள் கழித்து நடைபெற்ற கார்கில் போரில் முக்கிய பங்கு வகித்தவர். சொல்லப்போனால் கார்கில் போரில் பங்கு வகித்த ஒரே பெண் விமானி அவர்தான்.  அந்த விதத்தில் இந்தியாவின் சார்பில் போரில் பங்கு பெற்ற முதல் பெண் ஐஏஎஃப் அதிகாரியும் அவரே!

1975ல் ஒரு ராணுவக் குடும்பத்தில் பிறந்தார் குஞ்சன் சக்சேனா.  அவர் அப்பாவின் பெயர் அனுப் குமார் சக்சேனா.  இவர் லெப்டினன்ட் கர்னலாக இருந்தவர்.  குஞ்சன் சக்சேனாவின் அண்ணன் அன்ஷுமான் கூட இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்தான்.

மிகச்சிறு வயதிலிருந்தே விமான ஓட்டியாகும் கனவை சுமந்தவர் குஞ்சன் சக்சேனா. (பெண்கள் காரோட்டுவதே பெரிய விஷயம் என்றிருந்த காலகட்டம் அது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்!).  'நானும் என் அண்ணனும் சிறுவயதில் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டிய போது என் அப்பா நாங்கள் விமான ஓட்டிகள் ஆகவேண்டும் என்று அடிக்கடி கூறுவார்எனது உறவினர் ஒருவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான ஓட்டியாக பணிபுரிந்தார்.  நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என்னை அழைத்துச் சென்று விமானத்தின் பைலட் அமரும் பகுதியான காக்பிட்டைக் காட்டினர்.  அன்றே தீர்மானித்து விட்டேன், நான் விமான ஓட்டியாகதான் ஆக வேண்டுமென்று' என்று கூறுகிறார் குஞ்ஜன் சக்சேனா.

பள்ளிப்படிப்பு முடிந்ததும், மாவட்டத்திலேயே மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், கல்லூரியில் சேராமல் விமானம் ஓட்டும்  பயிற்சி நிலையத்தில் சேர வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்.  ஆனால் பட்டதாரியாக இருந்தால்தான் விமான ஓட்டி பயிற்சிகளில் ஈடுபடலாம் என்று பயிற்சி விதிகளை திடீரென்று மாற்றி விட்ட காரணத்தினால், டெல்லியி​ல் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

பின்னர் சப்தார்ஜங்கில் உள்ள விமான பயிற்சி  நிலையத்தை அணுகிய போது பல லட்சம் கட்டணத்தை செலுத்தினால் தான் சேர முடியும் என்கிற நிலை. அப்போது நாளிதழில் வெளியான ஒரு விளம்பரம் அவரது கவனத்தை ஈர்த்தது.  இந்திய வான்துறை அமைச்சகத்தின் விளம்பரம் அது. விமானப் படையில் முதல்முறையாக பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்கிற விளம்பரம்.

'அட, கட்டணம் இல்லாமலேயே விமான பயிற்சி!'  குஞ்ஜன் சக்ஸேனா உடனடியாக அதற்கு விண்ணப்பிக்க,  பலவித தகுதித் தேர்வுக்குப் பிறகு பயிற்சியில் சேர்க்கப்பட்டார்.

விமான ஓட்டியாக அவர் முதன்முதலாக பணியமர்த்தப்பட்ட இடம் உதம்பூர். இது ஜம்மு காஷ்மீரில் உள்ளது.

'எங்களுக்கென்று தனியாக உடைமாற்றும் அறை கிடையாது.  இதற்காக நானும் என்னுடன் பணியாற்றிய மற்றொரு பெண்ணும் ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டோம்.  நான் உடை மாற்றிக் கொள்ளும்போது அவர் அறைக்கு வெளியே நின்று கொள்வார்.  அவர் உடை மாற்றிக் கொள்ளும் போது நான் வெளியே காவல் செய்வேன்'.

ஆண்கள் உலகமாக இருந்த அவ்விடத்தில் தனி ஒரு பெண்மணியாக தன் பணிச்சூழலில் பொருந்துவதற்கு குஞ்சன் சக்சேனா பட்ட பாடுகள் கொஞ்ச
ந​ஞ்சமல்ல.

பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு அன்று தனி கழிவறை கூட இல்லாத நிலை. பக்கத்து அறையில் ஒவ்வொரு இரவும் பல விமானப் படை வீரர்கள் மிக அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்கவிட்டு கும்மாளமடிப்பதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். சீருடைக்கு மாற வேண்டு    மென்றால் கூட உடை மாற்றிக்கொள்ள பெண்களுக்கு என்று தனி அறை இல்லாத நிலையில் வெகுதூரம் ஓடிச்சென்று அங்கு நிறுத்தப் பட்டிருக்கும் விமானத்திற்குள் உடையை மாற்றிக்கொண்டு மீண்டும் வரவேண்டிய நிலை. பயிற்சியாளர்களின் ஒத்துழைப்பும்  இல்லை.  "விமானத்தை ஓட்டும்போது இந்தப் பெண் அழுதால் நான் விமானத்தை கவனிப்பேனா, அவளுக்கு ஆறுதல் கூறுவேனா?" என்றாராம் ஒரு பயிற்சி அதிகாரி.

இத்தனை தடைகளையும் மீறி தன்னை நிரூபித்துக் காட்டினார் குஞ்சன் சக்சேனா.

கார்கில் போர் உருவானது. இந்திய ராணுவ வீரர்கள் சிலர் அடிபட்டுக் கிடக்க அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார் குஞ்சன் சக்சேனா.

சீட்டா வகை ஹெலிகாப்டரை போர்க்களத்தில் ஓட்டிச்சென்ற இரண்டே பெண்கள் குஞ்சன் சக்சேனாவும் ஸ்ரீவித்யா ராஜன் என்பவரும் தான்.  ஸ்ரீநகரில் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகே காயமுற்று விழுந்திருந்த இந்திய ராணுவ வீரர்களை ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு திரும்ப வேண்டிய பணி அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த பணியில் எதிரிப் படையின் குண்டுவீச்சில் இருந்து மயிரிழையில் தப்பினார் குஞ்சன் சக்சேனா. தனது பணியை வெற்றிகரமாக முடித்தார். இதற்காக அவருக்கு ஷெளர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.  அப்போதிலிருந்து அவர் கார்கில் பெண் என்றும் அழைக்கப்பட்டார்.

குஞ்ஜன் சக்ஸேனா இந்திய வான்தடத்தின் ஒரு திருப்புமுனை என்றால் மிகையாகாது. இவரது வாழ்க்கை அவரது பெயரிலேயே ஒரு திரைப்படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடர்ந்து பறப்பார்கள்)

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com