வேர்க்கடலையும் முந்திரியும் !

வேர்க்கடலையும் முந்திரியும் !
Published on
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க !
-கோவிந்தராஜன், சென்னை.

வேர்க்கடலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துக்கள் தான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற அவநம்பிக்கை இருந்து வருகின்றது. ஆனால் இந்த வேர்க்கடலையில் அதிகமான சத்துக்கள் உள்ளது.

வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் நம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் அமிலம் நம் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

வேர்க்கடலையில் அதிகமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் உள்ளது. இது மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாகாமல் தடுக்கிறது.

வேர்க்கடலை நார்ச்சத்து உள்ள உணவு என்பதால் இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் போன்றப் பிரச்சனைகள் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக வேர்க்கடலையில் காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மாறாக இரத்த கொதிப்பை வேர்க்கடலைக் குறைக்கிறது.

உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலையை சாப்பிடலாம். வேர்க்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து அதிகமாக உள்ளது. இது இதய குழாய்களைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

ஹீமோ ஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் இரத்தம் உறையாது. இந்த நோயை குணப்படுத்த இவர்கள் அடிக்கடி உணவில் வேர்க்கடலைச் சேர்த்து கொண்டால் விரைவில் இந்த நோயில் இருந்து விடுபடலாம்.

மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கில் இருந்து குணமடைய அடிக்கடி உணவில் வேர்க்கடலையைச் சேர்த்து கொள்ளலாம். மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.

வேர்க்கடலையில் இருக்கும் வேதிப்பொருட்கள் புற்றுநோய் வரக் காரணமாக இருக்கும் செல்களை அழிக்கிறது. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது.

அல்ஸீமர், பார்க்கின்ஸன் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை பெரிதும் உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகிறது.

வேர்க்கடலையை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் போன்றவை ஏற்படாது. வேர்க்கடலையில் மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.

பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், வேர்க்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் முந்திரி!! 

ரோக்கியப் பலன்கள் பலவற்றை அள்ளித் தருவதில் முந்திரிக்கு முதல் வரிசையிலேயே இடம் உண்டு. நாம் உண்ணும் உணவே பல நேரங்களில் மருந்தாகவும் நோய்கள் வருவதைத் தடுப்பதாகவும் அமைந்துவிடுகிறது. அவற்றில் ஒன்றுதான் முந்திரி. முந்திரிப்பழம் மற்றும் முந்திரி இரண்டிலுமே துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும், இது சுவாசக்கோளாறுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடியது. முந்திரியில் நிறைந்துள்ள சத்துக்களானது நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதுடன் நோய்கள் வராமலும் தடுக்கின்றது.

முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம் உள்ளது. 100 கிராம் முந்திரியில் 553 கலோரிகள் உள்ளன. செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும் அதிகம் இருக்கின்றது. அதனால் நாள் ஒன்றுக்கு நான்கு முந்திரி வரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். முந்திரியில் சோடியம் குறைவாக மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்க முந்திரி உதவுகிறது. மேலும், முந்திரியில் உள்ள ரசாயனம் பல்வலியைச் சரிசெய்வதோடு, காசநோய் மற்றும் தொழுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

முந்திரியில் காப்பர் அதிக அளவில் இருப்பதால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.  முந்திரிப் பருப்புக்களை ஒரு கையளவு உட்கொள்வதால், நீண்ட நேரத்திற்கு பசியைக் கட்டுக்குள் வைக்கும். முந்திரியில் உள்ள தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உணவில் உட்கொள்வது நல்லது. டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. எனவே முந்திரியை அளவுடன் சாப்பிடவேண்டும். முந்திரியில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளது. மேலும், இரத்த நாளங்கள், மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு முந்திரி ஆரோக்கியம் தருகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com