1) மஞ்சள் தூள் மற்றும் தக்காளி சாற்றினை கலந்து நன்கு குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட நம் சருமத்தின் நிறம் கூடும்.
2) பாதாம் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து சூடு செய்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடங்கள் ஊறவிட்டு பின்னர் கழுவ முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
3) காய்ச்சாத பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து தினமும் முகம், கழுத்து, கை பகுதிகளில் தேய்த்து இரண்டு நிமிடம் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கழுவி விட முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல், வறண்ட சருமம், சுருக்கங்கள் நீங்கி பளிச்சென்று இருக்கலாம்.
4) இதேபோல் பாலாடையை கொண்டும் முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி கழுவ சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதுடன் சருமம் வறண்டு போகாமல் மிகவும் மிருதுவாக இருக்க உதவும்.
5) சிலருக்கு பூனை முடி உதட்டின் மேல் மற்றும் கீழ் பகுதியில் வளரும். இதற்கு மஞ்சள் தூள் சிறிது எடுத்து உப்புடன் சேர்த்து சிறிது நீர் விட்டு குழைத்து முடிகளின் மேல் தேய்த்து வர முடி உதிர்வதுடன் மீண்டும் முளைக்காது.
6) ஆப்பிள் பழத்தை தோல் எடுத்து அரைத்து அத்துடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகச் சுருக்கங்கள் ஏதும் இன்றி பளபளக்கும்.
7) எலுமிச்சம்பழம் பிழிந்த தோலை புளித்த தயிர் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் முக்கி முகத்தில் தேய்த்து வர அதுவும் குறிப்பாக மூக்கின் இரண்டு பக்கம், உதட்டுக்கு கீழ், கன்னம் மற்றும் நெற்றிப் பகுதியில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விட முகம் பளிச்சென்று இருக்கும்.
8) அதேபோல் பொடுகு தொல்லைக்கு எலுமிச்சம் பழச்சாறு எடுத்து முடியின் அடிப்பகுதியில் மண்டை ஓட்டில் படும்படி தடவி அரை மணி நேரம் கழித்து முடியை அலச பொடுகு தொல்லை நீங்கிவிடும். இதனை வாரத்துக்கு இரண்டு முறை செய்ய சீக்கிரம் பலன் கிடைக்கும்.
9) குப்பைமேனி கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அத்துடன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் அல்லது அம்மியில் அரைத்து முகம், கை, கழுத்து பகுதிகளில் பூசி குளிக்க சருமம் மிருதுவாக இருப்பதுடன் முகப்பரு, மரு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
10) ரெண்டு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அதில் இரண்டு ஆர்க்கு வேப்பிலையை உருவி போட்டு தட்டை போட்டு மூடி ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த வேப்பிலையை கையால் நன்கு கசக்கி எடுத்துவிட்டு நன்கு ஆறியதும் அந்த நீரை முகத்தில் விட்டு கழுவி வர முகம் மாசு மருவின்றி அழகாக இருக்கும்.