இந்தியாவில் கோடைக் காலம் முடிந்து, மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இதைத்தான் புவி வெப்பமயமாதல் எனக் கூறுகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று நமக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் மக்கள் வாழ முடியாத அளவுக்கு வெப்பமடையப்போகும் பகுதிகள் பற்றிய தகவல்களை விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆய்வறிக்கையின்படி அமெரிக்காவின் சில பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் ஆசியா போன்ற பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகம் தாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குளிரான பகுதிக்குச் செல்வார்கள் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறும் அனைத்தும் உண்மையாக மாறினால் பல மோசமான விளைவுகளை நாம் சந்திக்கக்கூடும். கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெனின், காம்பியா, நைஜீரியா மற்றும் நெதர்லாந்தின் ஆண்டில்ஸ் போன்ற நாடுகள் 2070ம் ஆண்டுக்குள் கடுமையான வெப்ப அலைகளால் தாக்கப்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதில் உள்ள கூடுதல் ஆபத்து என்னவென்றால், விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ள பகுதிகளை விட, இன்னும் அதிகமான பகுதிகள் வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பூமியின் மேற்பரப்பில் சுமார் 19 சதவீதம் வரை இந்த வெப்பத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் விரிவடைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் 2070ம் ஆண்டுக்குள் சுமார் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெப்ப அலைகளால் கடுமையான பாதிப்புகளை சந்திப்பார்கள். மேலும், எதிர்காலத்தில் கோடை காலங்களில் இந்தியா மற்றும் நைஜீரியாவில் வசிக்கும் மக்கள் அதிக ஆபத்தை சந்திக்கப் போகிறார்கள் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமியின் சராசரி வெப்பநிலை 2100ம் ஆண்டுக்குள் சுமார் 3 டிகிரி வரை உயரும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இது பூமியை வெகுவாக பாதித்து, அதிகப்படியான உணவு மற்றும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் வேறு இடங்களுக்கு குடியேறத் தொடங்குவார்கள். இந்த இடப்பெயர்ச்சியால் மக்களிடையே தேவையற்ற சண்டை சச்சரவுகளும் அதிகரிக்கும்.