பூமியின் அடியில் விளையும் காய்கறிகளின் விசேஷ குணங்கள் தெரியுமா?

பூமியின் அடியில் விளையும் காய்கறிகளின் விசேஷ குணங்கள் தெரியுமா?

யற்கையிலே ஒவ்வொரு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும் அது வளரும் மண்ணைப் பொறுத்தே அதன் தரமும், சுவையும் இருக்கும். அதுபோல பூமியின் அடியில் விளையும் காய்கறிகள் மற்றும் கிழங்குகளுக்கு சில விசேஷ குணங்கள் இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

பூமியின் அடியில் விளையும் காய்கறிகளை வேர் காய்கறிகள் என்கிறார்கள். இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம். வேர் காய்கறிகள் நிலத்தடியில் வளர்வதால் அதன் மற்ற பகுதிகளுக்கு உணவளிக்க தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துகளை மண்ணில் இருந்து உறிஞ்சுகின்றன. இவற்றை நாம் உணவாக எடுக்கும்போது அந்த சத்துக்கள் நமக்கும் ஆற்றலை வழங்குகின்றன. பல நாள்பட்ட நோய்களை தடுக்க வேர் காய்கறிகள் உதவுகின்றன.

பூமியின் அடியில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் கிழங்குகள் இயற்கையிலேயே, ‘செரடோனின்' எனும் ஹார்மோனை அதிகம் சுரக்கும் ஆற்றல் உடையவை. இந்த ஹார்மோன்தான் மனிதர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சி உணர்வை தருகிறது.

பூமியின் அடியில் வளரும் காய்கறிகள் குளூட்டன் பிரியாக இருக்கும். அதனால் செரிமான கோளாறுகளைத் தவிர்க்கும் என்கிறார்கள். இயற்கையாக மண்அடியில் விளையும் அநேக காய்கறிகள் மற்றும் கிழங்குகள் உடல் நோய்களை விரட்டும் ஆற்றலுடையவை. உடல் உள் காயங்கள் ஏற்படாது பாதுகாக்கும் ஆற்றலையும் கொண்டவை. பூமியின் அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, டர்னிப், பீட்ரூட், கருணைக்கிழங்கு, இஞ்சி மற்றும் பூண்டு, மஞ்சள் போன்றவை புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டவை. நோய்களை விரட்டும் ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் அடங்கியவை. உடல் கழிவுகளை வெளியேற்றும் ஆற்றலும் கொண்டவை.

உடலில் நோய்கள் வராமல் தடுக்க உடலில் கார மற்றும் அமிலத்தன்மை சமநிலையில் வைக்கப்பட வேண்டும். அதற்கு பூமியின் அடியில் விளையும் கேரட், முள்ளங்கி மற்றும் பீட்ரூட் போன்றவை உதவுகின்றன. பூமியின் தொடர்பில் வளரும் காய்கறிகள் வெளி தொடர்பு இல்லாததால் சத்துக்கள் கெடாமல் இருக்கும்.

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் உடல் எடையை குறைக்கும் பண்புகள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி விளையும் காய்கறிகளுள் ஒன்று கேரட். இதில் நார்ச்சத்து மற்றும் உடலுக்கு ஏற்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. உடலில் உள்ள பித்த நீர் சுரப்பை துரிதப்படுத்தி உடல் எடை குறைப்புக்கு உதவும் காய்கறி கேரட். இதை சாலட், சப்ஜி, சாறு, பொறியல் போன்ற பல வகைகளில் செய்து சாப்பிடலாம். இனிப்பு சுவை கொண்ட கேரட், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பதுதான் ஆச்சரிய உண்மை. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கேரட் உதவுகிறதாம்!

வேர் காய்களில் ஒன்றான வெங்காயத்தில் 50 வித்தியாசமான சத்துக்கள் இருக்கின்றன. வெங்காயத்தை வெறும் வாயில் மென்று விழுங்குவதால் நம்முடைய இரத்தத்தை திரவ நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அதனால் ஹார்ட் அட்டாக் தவிர்க்கப்படுகிறது. அதில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும். எனவே, உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது.

முள்ளங்கியும் வேர் காய்கறி குடும்பத்தைச் சேர்ந்தது. மாவுச்சத்து இருப்பதால் பல நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடுவதில்லை. ஆனால், முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இரைப்பை குடல் அமைப்பை சீர்குலைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், முள்ளங்கி குடலைச் சுத்தப்படுத்தவும், அமிலத்தன்மை மற்றும் வயிற்று உபாதைகளைத் தவிர்த்து ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

கிழங்கு வகைகளிலேயே அதிக வைட்டமின்களும், தாது உப்புக்களும், கரையும் நார்ச்சத்தும், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டும் உள்ளது சர்க்கரை வள்ளிக் கிழங்குதான். இதிலுள்ள பீட்டா கரோட்டின் தோல்களின் ஆரோக்கியம் காக்கிறது. மேலும், இது மெதுவாக செரிமானமாகும் உணவு என்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

வலிகளிலிருந்து நிவாரணம் பெற வேர் காய்கறிகள் உதவுகின்றன என்கிறார்கள். காரணம், அவற்றிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் வலிகளைக் குறைக்க உதவுகின்றன என்கிறார்கள். (குறிப்பாக, காரட் மற்றும் பீட்ரூட்) வேர் காய்கறிகளான பீட்ரூட், உருளைக்கிழங்கு, டர்னிப் போன்றவை பிரீடயாபடிக் எடை இழப்புக்கு உதவுதல், செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைத்தல் போன்றவற்றுக்கு உதவுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com