உணவு வீணாகுதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையாகும். உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. உணவு வீணாகுதல் என்பது, உணவுப் பொருட்கள் வீணாவதை மட்டுமே குறிப்பதில்லை. அந்த உணவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட பணம், நீர், உழைப்பு, நிலம் மற்றும் போக்குவரத்து அனைத்தும் வீணாவதையும் இது குறிக்கிறது. வீணாகும் உணவு குப்பைக்குச் செல்வதால், மீத்தேன் வாயு உருவாகி சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. இப்படி உணவு வீணாவதைக குறைக்க உண்டான ஏழு வழிகளைக் காண்போம்.
1. தேவையான பொருட்களை மட்டுமே வாங்குதல்: கடைக்குச் செல்லும் முன், கடந்த முறை வாங்கிய அனைத்து உணவு பொருட்களையும் சமைத்து விட்டோமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிட்டு, அதில் உள்ள பொருட்களை மட்டுமே வாங்குங்கள்.
2. உணவுப் பொருட்களை முறையாக சேமித்து வைக்கவும்: உணவுப் பொருட்களை வாங்கியதும் அவற்றை முறையாக சேமித்து வைக்கவும். உதாரணமாக, பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியின் பொருத்தமான அறைகளில் வைக்க வேண்டும். இறைச்சி மற்றும் மீனை பிரீசரில் வைக்கவும். வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு போன்றவற்றை காற்றாட உலர வைக்கவும். மளிகைப் பொருட்களை டப்பாக்களில் முறையாக சேமிக்கவும். வாங்கிய பொருட்களை காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்துவது முக்கியம். அழுகிப்போன காய்கறிகளை, வண்டு விழுந்த மளிகைப் பொருட்களை அவ்வப்போது அகற்றவும்.
3. தேவையான அளவு மட்டும் உணவை தயார் செய்யவும்: குடும்பத்துக்குத் தேவையான அளவு மட்டும் சமையுங்கள். விருந்தினர்களுக்கு சமைப்பதனால் ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உணவு தயாரித்தால் போதும். ஐந்து பேர் வந்தால் பத்துப் பேருக்கு சமைத்து உணவை வீணாக்க வேண்டாமே.
4. எஞ்சியவற்றை பாதுகாப்பது அல்லது விருந்தினர்களுக்குக் கொடுங்கள்: அதிக உணவைச் சமைத்தால், விருந்தினர்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஊக்குவிக்கவும். எஞ்சியிருப்பதை உடனடியாக ஃப்ரீசரில் வைத்து சேமிக்கவும்.
5. புதியதைத் தயாரிப்பதற்கு முன் எஞ்சியவற்றை உண்டு முடிக்கவும்: அடுத்த வேளைக்கு புதிய உணவைச் சமைப்பதற்கு முன்பு, ஏற்கெனவே எஞ்சியுள்ள உணவை உண்டு முடிக்க வேண்டும். அதை அப்படியே சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால், புது டிஷ் ஆக மாற்றுங்கள். பழைய இட்லியை இட்லி உப்புமா செய்வது, மிச்சமிருக்கும் பொரியலை தோசையில் வைத்து மசாலா தோசை போடுவது, சாதம் மிகுந்திருந்தால், அதை புளியோதரை செய்வது என்று புது உணவைத் தயாரியுங்கள்.
6. பிறருக்குக் கொடுங்கள்: விருந்து, விழாக்களில் மீதமான உணவை வீணாக்காமல் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவுங்கள்.
7. உரம் தயாரியுங்கள்: எஞ்சியிருக்கும் உணவுக் கழிவுகள் அல்லது மீண்டும் பயன்படுத்த முடியாத உணவுகளை குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு பதிலாக உரமாக்கலாம். இது ஊட்டச்சத்துக்களை மண்ணில் மறுசுழற்சி செய்ய உதவுகிறது. அது மட்டுமின்றி, மீதமான உணவுகளை செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.