பொதுவாகவே நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்கள் முதலில் ரசம்,ம் கஞ்சி வைத்து சாப்பிடுங்கள் என்று தான் சொல்வார்கள். ரசத்தில் அவ்வளவு ஜீரண சக்தி உள்ளது. அதே போல் அண்ணாச்சி பழத்திலும் அளவற்ற சத்துக்கள் இருப்பது நமக்கு தெரியும். இந்த இரண்டும் சேர்ந்தது தான் பைனாப்பிள் ரசம்.
இந்த ரசம் காரம், புளிப்பு, இனிப்பு சுவையின் கலவையுடன் அட்டகாசமாக இருக்கும். அடுத்த முறை வீட்டில் பைனாப்பிள் வாங்கும் பொழுது இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். சூடான சாதத்துடன் பைன் ஆப்பிள் ரசம் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து உருளைக்கிழங்கு வறுவல், சிக்கன் மிளகு பிரட்டல் அல்லது சிம்பிளா முட்டை பொரியல் வைத்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும். பைனாப்பிள் ரசம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரைக்க:
அன்னாசிப்பழம் - 150 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
பூண்டு 6-8
மற்றவை
துவரம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 1-2
தக்காளி - 2
அன்னாசிப்பழம் - 100 கிராம்
பெருங்காயம் - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை 10-15
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை கழுவி சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் அன்னாசிப்பழம், மிளகு, சீரகம், மஞ்சள் பொடி மற்றும் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயை சூடாக்கி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் அன்னாசிப்பழம் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும். இதனுடன் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்போது உங்களுக்கு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இதனுடன் நன்கு குழைய வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கலக்கவும். நுரை பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும். ரசத்தை அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து சூடான சாதத்துடன் பரிமாறவும். புளிப்பு, இனிப்பு என அனைத்து சுவையுடன் கூடிய இந்த ரசத்தை சுவைத்தால் அப்படி இருக்கும்.