'ஓணம் சத்யா' நெய் போளி செய்வது எப்படி?
பசுமையான தலை வாழை இலையில், பலவித வண்ணங்களில், 25 உணவு வகைகளை கவர்ச்சிகரமாகப் பரிமாறி ஓணம் பண்டிகையன்று கேரள மக்கள் உண்ணும் உணவே 'ஓணம் சத்யா' எனப்படும். இதிலிருக்கும் முக்கிய ஐட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கடலைப்பருப்பு நெய் போளி.
இதன் செய்முறை எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவை: கடலைப்பருப்பு 1 கப், தண்ணீர் 2½ கப், சர்க்கரை 1 கப், ஜாதிக்காய் பவுடர் ¼ டீஸ்பூன், ஏலக்காய் பவுடர் ¼ டீஸ்பூன், நெய் 1½ டேபிள்ஸ்பூன், ¾ கப் ஆல் பர்ப்பஸ் மாவு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, அரிசி மாவு ¼ கப், நல்லெண்ணெய் 1டேபிள்ஸ்பூன்.
செய்முறை: குக்கரில் தண்ணீரை ஊற்றி, கடலைப் பருப்பைச் சேர்த்து நான்கு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆறிய பின் நீரை ஒட்ட வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும். சர்க்கரையையும் பவுடர் பண்ணிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஆல் பர்ப்பஸ் மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், அரை டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து தேவையான நீர் கலந்து மிருதுவான பூரி மாவு பதத்துக்கு பிசைந்து மேலேயும் எண்ணெய் பூசி அரைமணி நேரம் ஊற விடவும்.
அடி கனத்த ஒரு பாத்திரத்தில் பொடித்த பருப்பு, சர்க்கரை, ஏலக்காய், ஜாதிக்காய் பொடி, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் அனைத்தையும் போட்டு, அடுப்பில் மிதமான தீயில் வைத்துக் கிளறவும். நன்கு கலந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கிவிடவும். பின் பிசைந்த மாவை உருண்டைகளாக்கி, உருட்டி, நடுவில் கடலைமாவு பூரணம் தேவையான அளவு வைத்து மூடி தோசை கல்லில் நெய் தடவி போளிகளை சுட்டெடுக்கவும்.