தமிழ்நாட்டின் அற்புத அரண்மனைகள்!

• செட்டிநாடு அரண்மனை :
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் கானாடுகாத்தான் கிராமத்தில்தான் ராஜா அண்ணாமலை செட்டியாரால் வடிவமைக்கப்பட்ட இந்த வீடு இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கானாடுகாத்தான் மட்டுமல்லாது அருகிலுள்ள கோட்டையூர், காரைக்குடி, செட்டிநாடு ஆகிய ஊர்களிலும் இதே போன்ற பிரம்மாண்டமான வீடுகளைப் பார்க்கலாம்.
தங்கள் வீட்டு விசேஷங்களையும் வீட்டிலேயே நடத்துவதை செட்டியார்கள் வழக்கமாகக் கொண்டவர்கள். அதனால் வீடே பெரிய மண்டபம்போல் இருக்கும். கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகளிலிருந்து அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள் மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு அரண்மனை கட்டப்பட்டுள்ளது.
• பெர்ன்ஹில்ஸ் பேலஸ்:

1844 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெர்ன்ஹில்ஸ் பேலஸ் அந்தக் காலங்களில் மைசூர் மகாராஜாவின் கோடைக் கால வசிப்பிடமாக இருந்து வந்தது. ஊட்டியில் அமைந்துள்ள இந்த அரண்மனை தற்போது பச்சை புல்வெளிகள், அடர்ந்த காடுகள், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அழகாக இருக்கிறது.
• பத்மநாபபுரம் அரண்மனை:

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோயிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பத்மநாபபுரம் என்னும் சிறுநகரத்தில் வெள்ளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது கி. பி.1601-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது.
• திருமலை நாயக்கர் அரண்மனை:

கி.பி. 1636 ஆம் ஆண்டில், திருமலை நாயக்கர் மஹால் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்தோ சராசனிக் பாணியில் கட்டப்பட்டது. கட்டிடத்தின் ஸ்திரத் தன்மைக்காக சுண்ணாம்பு, தன்றிக்காய், வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய் கலந்த கலவையை மேல்பூச்சாக அரண்மனை எங்கும் பூசியுள்ளனர். இந்த அரண்மனையில் மொத்தமாக 48 அடி உயரமும் 12 அடி அகலமும் கொண்டு 248 தூண்கள் உள்ளன.
• தஞ்சாவூர் அரண்மனை:

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் தஞ்சாவூர் அரண்மனையானது கட்டப்பட்டது. அவர்களின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த அரண்மனை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்த அரண்மனை வளாகத்துக்குள் தற்போது ராஜா சரபோஜி மெமோரியல், ராயல் பேலஸ் அருங்காட்சியகம், தர்பார் ஹால், சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை காணப்படுகின்றன.
• தமுக்கம் அரண்மனை:

1670-ல் கட்டப்பட்ட தமுக்கம் அரண்மனை நாயக்க வம்சத்தை சேர்ந்த ராணி மங்கம்மாளின் கோடைக்கால மாளிகையாக பயன்படுத்தப்பட்டது. தமுக்கம் என்றால் கோடைக் காலத்தில் இளைப்பாறும் இடம் என்று பொருள். இந்த அரண்மனை 1959 ஆம் ஆண்டில் அருங்காட்சிய கமாக மாற்றப்பட்டு, தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகம் என்ற பெயரில் அறியப்படுகிறது.
• சொக்கநாத நாயக்கர் அரண்மனை:

மதுரை நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு தற்போது திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.