கருவில் சுமந்து
கனவில் மிதந்து
காலத்தே ஈன்றெடுத்தாய்
கண்திறந்தேன் களிப்புற்றாய்
பாலோடு பாசத்தையூட்டி
பல கதைகள் காதோடு பேசி
படுத்துறங்க மடி தந்தாய்
பசி தூக்கம் நீ மறந்தாய்
தவழ்ந்து விழுந்து
தடுமாறி நடந்து
தளர்நடை போட்டு
தாயின் கரம் பிடித்தேன்
பசிக்கு அன்னம் ஊட்டி
பழங்கதை பல பேசி
பார்த்து ரசித்திருந்தாய்
பாய்ந்து அணைத்துக் கொண்டாய்
நல்வழி நடக்க வைத்தாய்
நாளும் நான் வளர
நம்பாமல் வியந்து
நகை முகம் காட்டி நின்றாய்
உடன் வாழ துணை தந்தாய்
உதித்த முத்துக்களை
உன் மடி சுமந்தாய்
உலகமே அவரென்று உவகை கொண்டாய்
எத்தனை சொல்வேன் தாயே
ஏன் எனை பிரிந்தாய்
எல்லாம் ஆகி நின்ற உன்னை
எங்கோ பறக்க விட்டு விட்டேன்
சேர்த்த செல்வமிருந்தென்ன
சென்றடைந்த புகழ் இருந்தென்ன
செந்தீயில் வெந்த உனை
சேரும் நாள் வாராதோ!!