- கிர்த்திகா தரன்
தூறும் மழைநீர்
இடைவெளிகளில்
பரந்து விரிகிறது
நமக்கான ஈர வானம்
நனையச் செய்த மழைமேல்
பொறாமையில்
மரத்தடியில் ஒதுங்கச் செய்தாய்.
நெருங்கி வந்த உன்னை,
மறுக்க நினைத்த என்னை
மழுங்கடித்து முத்தமிட்ட நெற்றியில் மரமழை
சொட்டுச் சொட்டாய்
சூடுபடுத்த
நிமிர்ந்த அக்கணத்தில்
கண்கள் முழுக்க மிதந்தது -
கடவுளின் துகள்கள்
நான் மட்டுமே தரிசிக்க.
நெஞ்சம் தொடும்
மழைத்துளியின் கனம்
தாங்க முடியாமல்
ஒதுங்கச் சொன்னேன்.
நீயோ நனையக் கூப்பிடுகிறாய்.
மூளையின் ரசாயனம் சுரக்கச் செய்து
இக்குளிரிலும் வெப்ப மெழுகாய்
உருக வைக்கும் நீ
கரைந்து வழிந்தோட,
என்னை மழையாய்
மாற்றும் ரசாயனம்
ஒரு குப்பி கொடு
அருந்திவிடுகிறேன்.
உயர்திணைக்குக் கொடுக்காத
அச்செல்ல வார்த்தைகளை,
கொஞ்சல்களை, வருடல்களை
உன் நாய்க்குட்டிக்கு அளிக்கிறாய்
அது மழையில் குளித்து
அழகாக உதறும்பொழுது
கவனமாகத் தரையிலிருந்து
பொறுக்கிக் கொள்கிறேன் -
அக்கொஞ்சல் வார்த்தைகள்
மட்டுமல்ல
அத்தனை வருடல்களையும்
விரல் வரிகளையும்!