

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைப் பாதுகாக்கவும், சுத்தப்படுத்தவும் சென்னை மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் தற்போது பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது சென்னை மாநகராட்சி. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் கட்டட வேலைகளுக்காக அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுகின்றன. ஏற்கனவே காற்று மாசு அதிகரித்து வரும் சூழலில் மரங்களை வெட்டுவது, பேராபத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் தெரிவித்து வந்தனர். இதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் இனி பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மாநகராட்சி.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். இனி பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அதோடு மரக் கிளைகளை வெட்டினாலும், மரத்தில் ஆணி அடித்து விளம்பர பலகையை வைத்தாலும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் பொது இடங்களில் மரங்கள் வெட்டப்படுவதை பொதுமக்கள் யாரேனும் பார்த்தால், உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளில் கொட்டினால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என கடந்த 2025 டிசம்பர் 31ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது மரங்களை வெட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு, சென்னை வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரங்களை அகற்றுதல் மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளை வனத்துறை மூலமாகவே நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த நிலையை மாற்றி வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதி முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும், சென்னை மாநகராட்சி இணையதளம் (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த சேவையைப் பெற மாநகராட்சி இணையதளத்தில் உள்ள பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி பூங்கா கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்படும். கள ஆய்வின் முடிவுகள், பசுமை குழுவிற்கு அனுப்பப்படும். இந்த முடிவுகள் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும் இதனை இணையதளத்திலும் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.