கள்ளச்சாராய சாவுக்கு பத்து லட்சம் இழப்பீடு – இணையத்தில் எழுந்த சர்ச்சைகள்!

கள்ளச்சாராய சாவுக்கு பத்து லட்சம் இழப்பீடு – இணையத்தில் எழுந்த சர்ச்சைகள்!

கள்ளச்சாராய வேட்டை மூன்றாவது நாளாக தொடரும் நேரத்தில், தமிழகம் முழுவதும் சாராயம் காய்ச்சி விற்றது தொடர்பாக ஆயிரக்கணக்கானவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்து, கைது நடவடிக்கைகள் நடந்தேறி வருகின்றன.

தொடரும் கள்ளச்சாராய சாவுகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை எழுப்பியிருக்கிறது. ஊர்தோறும் டாஸ்மாக் இருந்தாலும் கள்ளச்சாராய விற்பனை பரவலாக இருப்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

20 ஆண்டுகளுக்கு பின்னர் கள்ளச்சாராயம் என்கிற வார்த்தை தமிழ்நாட்டில் பரவலாக பேசப்படுகிறது. டாஸ்மாக்கை விட போலி டாஸ்மாக் அதிகமாக இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ததது பரவலாக விமர்சனங்கள் பெற்றுள்ளது..

கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு தருவதை விமர்சிப்பது தவறு. தமிழக அரசு தரும் இழப்பீடு, இறந்தவர்களுக்கு அல்ல. அவர்களை நம்பியிருந்த அப்பாவி குடும்பத்தினருக்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசுபவர்களும் உண்டு.

தமிழகத்தில் அகால மரணம் அடைபவர்களின் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இறந்து போனவரால் கைவிடப்படும் குடும்பத்தினருக்கு ஊக்கத் தொகை அளிக்கவும் விதவை பென்ஷன் போன்ற பல்வேறு அரசு நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் நீண்டகாலமாகவே செயல்பட்டு வருகின்றன.

பொருளாதாரா ரீதியாக பின்தங்கியிருப்பவர்கள்தான் கள்ளச்சாராயத்தை நாடுகிறார்கள். டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவை விட விலை குறைவாக இருப்பதால்தான் கள்ளச்சாராயத்தை நாடுகிறார்கள். சட்டவிரோதமான கள்ளச்சாராயத்தை அருந்தியதால் உயிரிழப்பவர்களை மருத்துவ காப்பீட்டில் கொண்டு வரமுடியாது என்கிறார்கள்.

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துகளில் இறந்து போன்வர்களுக்கு மூன்று லட்சம்தான் தமிழக அரசு நிவாரண நிதியாக தந்திருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு பத்து லட்சம் தருவது நியாயமா என்கிறார்கள். பட்டாசு தொழிற்சாலை விபத்து என்பது பணியிடங்களில் நடைபெற்ற விபத்தாக கருதப்பட்டு இன்சூரன்ஸ் தொகை பெறப்பட வேண்டும்.

குளத்தில் தவறி விழுந்து இறப்பவர்களுக்கு 2 லட்சம் ருபாய்தான். கொள்ளிடம் ஆற்றுக்கரையில் தண்ணீரில் அடித்து சேல்லப்பட்டவர்களுக்கும் 2 லட்ச ரூபாய்தான் நிவாராண நிதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.குடும்பத்தினருக்கு பத்து லட்சம் தருவதற்கு பதிலாக வீட்டில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கலாம் என்கிறார்கள்.

கள்ளச்சாராயத்தில் மறைந்தபவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் தருவதற்கு தயாராக இருக்கும் தமிழக அரசு, தீராத வியாதிகளின் கொடும் நோயினால் குடும்பத்தை தவிக்க விட்டு இறப்பவர்களுக்கு இழப்பீடு தரவில்லை என்று சிலரும்,

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு கொடுக்கும்போது டாஸ்மாக்கில் குடித்து உயிரிழப்பவர்களுக்கும் கொடுக்கலாமே என்கிறார்கள்.

டாஸ்மாக்கில் தொடர்ந்து குடித்து வருபவர்கள் உயிரிழந்தால் இழப்பீடு தரவேண்டும் என்பது நியாயாமான கோரிக்கைதான் என்கிறது மறுதரப்பு. இழப்பீட்டை, டாஸ்மாக் நிறுவனமே தரவேண்டும். அப்படியென்றால் டாஸ்மாக்கில் தினசரி குடிப்பவர்களென்றால் டாஸ்மாக் வாடிக்கையாளர்களாக அங்கீகரித்து, அதன் மூலம் ஆயுள் காப்பீடும் செய்துவிடலாம்.

இழப்பீடு வழங்குவது தவறு, சரியென்று ஆரோக்கியமாக விவாதிப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் இழப்பீடு அறிவிப்பே ஒரு அரசியல்தான் என்று கருதுபவர்களும் உண்டு. உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பம் அரசுக்கெதிராக பேசுவார்கள். அதன் மூலம் டாஸ்மாக் விற்பனைக்கு எதிராக மக்கள் போராட்டம் உருவாகும் என்பது தெரிந்துதான் அவசர அவசரமாக அரசு இழப்பீட்டை அறிவித்திருக்கிறது என்று சொல்பவர்களும் உண்டு.

கள்ளச்சாராய சாவு, தமிழக அரசின் இழப்பீடு தொகைகள் பற்றிய ஆராய்ச்சியில் முடிந்திருக்கின்றன. எதுவாக இருந்தாலும் இணையவாசிகளின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியது நம்முடைய கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com