மக்களுக்கு குட்நியூஸ்! இனி ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு பதில் பணம்? மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!
ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களை வழங்குவதற்கு பதிலாக அதற்கான பணத்தை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், முன்னுரிமை (Priority) மற்றும் முன்னுரிமையற்ற (Non-Priority) குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் கடைக்கோடி மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் கார்டுகள் மூலம் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், நியாய விலைக் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வாங்கலாம், இது மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
மேலும் இது ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் பொருளில்லா அட்டை என 5 வகையான ரேஷன் அட்டைகள் செயலில் உள்ளன. குடும்பங்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து தான் அட்டை வகை தீர்மானிக்கப்படுகிறது.
சமீப காலங்களில், ரேஷன் கார்டுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன, இது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்க உதவுகிறது. தற்போது புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது, பெயரைச் சேர்ப்பது அல்லது நீக்குவது, முகவரியை மாற்றுவது போன்ற பல சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnpds.gov.in இணையதளத்திற்கு சென்று, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்நிலையில் இந்த பொது விநியோக திட்டத்தில் மத்திய அரசு மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களை வழங்குவதற்கு பதிலாக அதற்கான பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், இனிவரும் காலங்களில் பயனாளிகள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்காமல், அதற்கு பதிலாக அரசு தரும் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாய் செலவு செய்து வரும் மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், போலியான ரேஷன் கார்டுகள் மூலம் பலர் பயனடைந்து வருவதாகவும், ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல், வருமான வரி செலுத்துபவர்கள், ஜி எஸ் டி வரம்பிற்கு வருபவர்களும் இந்த இலவச திட்டங்களின் மூலம் பயனடைந்து வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இது போன்ற மோசடிகளை தடுக்கவும், உண்மையான இலவசம் தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவி சென்று சேர்வதை உறுதி செய்யவும், இ-ரூபி என்ற புதிய டிஜிட்டல் முறையை கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கும் ஒரு மாதத்திற்கு 500 அல்லது 1000 ரூபாய்க்கு டிஜிட்டல் வவுச்சர் அல்லது டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அதன் மதிப்பு ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தொகையை கொண்டு பயனாளிகள் ரேஷன் கடைகளிலும் அல்லது வெளிச்சந்தைகளிலும் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் ரேஷன் கடையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வேண்டாம் என நினைக்கும் பயனாளிகள், அந்த வவுச்சரை பணமாக மாற்றி அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கு முன், சோதனை அடிப்படையில் ஆய்வு செய்யும் பொருட்டு சண்டிகர், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த சோதனை முறை வெற்றியடையும் பட்சத்தில் இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் ரேஷன் கடைகளை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ரேஷன் கடை விநியோகஸ்தர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

