

தமிழ்நாடு அரசு சார்பில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று வெளியிட்ட உத்தரவு: கும்பகோணம் உதவி எஸ்பி அங்கித் சிங் சேலம் வடக்கு துணை ஆணையராகவும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி உதவி எஸ்பி சிருஷ்டி சிங் திருச்சி தெற்கு துணை ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த ஐஜி ராஜேஸ்வரி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐஜியாகவும் அப்பிரிவில் ஐஜியாக இருந்த கயல்விழி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி ரம்யா பாரதி மாநில குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், சேலம் வடக்கு துணை ஆணையர் சிவராமன் வேலூர் எஸ்பியாகவும் அங்கிருந்த மயில்வாகனன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு சரக எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி தெற்கு துணை ஆணையர் டி.ஈஸ்வரன் ஆவடி போக்குவரத்து துணை ஆணையராகவும், சென்னை ரயில்வே எஸ்பி ஐ.ஈஸ்வரன் சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும், அங்கிருந்த உதயகுமார் கோயம்பேடு துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுஜித் குமார் சென்னை மேற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும், இங்கிருந்த சுகாஷினி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்பியாகவும், அங்கிருந்த நாகஜோதி காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.