

விவசாயத்தின் முக்கிய உப தொழிலாக இருக்கும் கறவை மாடுகள் வளர்ப்பு, நல்ல லாபத்தை அளிக்க கூடியது. குறிப்பாக கிராமங்களில் மாடுகள் வளர்ப்பு என்பது நகரத்தை காட்டிலும் எளிதாகவே இருக்கும். ஏனெனில் மாடுகளுக்கான தீவனம் கிராமங்களில் மிக எளிதில் கிடைக்கும். இந்நிலையில் விவசாயிகள் மற்றும் பால்பண்ணை தொழிலில் ஆர்வம் உள்ளவர்கள் கறவை மாடுகளை வாங்க, தமிழக அரசு ரூ.1.20 லட்சத்தை கடனாக வழங்குகிறது.
விவசாயிகள் கறவை கால்நடை திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகமானது (TABCEDCO), தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (Aavin) மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் மூலம் இரண்டு கறவை மாடுகளை வாங்குவதற்கு கடன் வழங்குகிறது.
கறவை கால்நடை திட்டத்தின் படி, ஒரு கறவை மாட்டுக்கு ரூ.60,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம் கடனாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியமாகும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் கறவை மாடுகள் அல்லது எருமை மாடுகளையும் வாங்கிக் கொள்ளலாம்.
தகுதிகள்:
1. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உறுப்பினராக இருத்தல் அவசியம்.
2. ண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
3. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபைச் சேர்நதவர்கள் கறவை மாடு வாங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
4. கடன் பெற விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
5. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
திருப்பி செலுத்துதல்: கடனைத் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 3 ஆண்டுகள்.
ஆண்டு வட்டி விகிதம் 7%.
தேவைப்படும் ஆவணங்கள்:
1. வருமான சான்றிதழ்
2. சாதி சான்றிதழ்
3. பிறப்பிடச் சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
* தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (Aavin) அல்லது மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு நேரடியாக சென்று விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
* https://tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
* இந்த இணையதளத்திற்கு சென்று முதலில் ‘ஒரு முறை பதிவின்’ மூலம் உங்களின் மொபைல் எண், ஆதார் எண், முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
* அதன் பிறகு உங்களுக்கு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்படும்.
* பயனர் பெயர் கிடைத்ததும் இணையதளத்தில் உள்நுழைந்து, ‘Apply Now’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, கறவை கால்நடை திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: 044-28190122 / 044-28190145