

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு தமிழக அரசு மானியம் அறிவித்துள்ளது.
உணவகங்கள், டீக்கடைகள் கூடுதல் மின்சார பயன்பாட்டுக்கு மாறினால் ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் மானியமாக வழங்கப்படும். மின் அடுப்புகளைப் பயன்படுத்தும் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு, மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டிற்கு ரூ. 2 வீதம் சலுகை அளிக்கப்படும். இந்தச் சலுகையானது மத்திய அரசு வணிக எரிவாயு விநியோகத்தின் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கும் காலம் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டருக்கு மாற்றாக மின் அடுப்புகளை பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நீங்கும் வரை மின்சார பயன்பாட்டிற்கான சலுகை தொடரும் என தமிழக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவித்துள்ளார். அத்துடன் உணவகங்கள் காய்கறி வாங்குவதை குறைத்துள்ளதால் காய்கறிகள் வீணாவதைத் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி விற்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களிலும் உணவு வகைகள் குறைப்பு நடந்து வருகிறது. சென்னை ஐஐடி கேண்டீனிலும், அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதி கேண்டீனிலும் கூட உணவு வகைகள் குறைப்பு. சாலையோர கடைகளில் விறகு கொண்டு சமையல் செய்யப்படுகிறது. விறகு எரிப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்அனுமதி பெறத் தேவையில்லை என்றும், எல்பிஜி தட்டுப்பாட்டால் உணவகங்கள் விறகுகளை பயன்படுத்துவதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் புதிய மின் சாதனங்களை வாங்க விரும்பும் சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மின்சார சமையல் உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ. 3.05 லட்சம் வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் 25 சதவீத மானியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பூரில் கடும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக 4000 ரூபாய்க்கு வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களை கள்ளச் சந்தையில் விற்ற கேஸ் ஏஜென்சிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க, அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களை வணிகரீதியாக பயன்படுத்தினால், அவை பறிமுதல் செய்யப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது எனது குறிப்பிடத்தக்கது.