

இந்தியாவின் மாபெரும் எரிசக்தி திட்டமாக அமையப் போகிறது குஜராத் - ஓமன் இடையே அமையப்போகும் 2,000 கி.மீ நீள எரிவாயு குழாய் திட்டம்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தைத் தீர்க்கவும், இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்த்து எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அதிரடியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், நிலையான எரிவாயு விநியோகத்தை உருவாக்கவும் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அதுதான் ஓமன் நாட்டில் இருந்து குஜராத் வரை கடலுக்கு அடியில் 2,000 கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்டமான இயற்கை எரிவாயு குழாய் (Middle East-India Deepwater Pipeline) அமைக்கும் திட்டம். தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.இது உலகிலேயே கடலுக்கு அடியில் அமைக்கப்படும் மிக ஆழமான (சுமார் 3,000 மீட்டருக்கும் மேல்) குழாய் அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் மிக முக்கியப் பயன் என்னவென்றால், உலக வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) வழியாக வரும் அபாயகரமான கப்பல் போக்குவரத்து மீதான இந்தியாவின் சார்புத்தன்மை பெருமளவு குறையும். கப்பல் போக்குவரத்தை இனி நம்பியிராமல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) நேரடியாக இந்த குழாய் மூலம் பெற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
மேலும் இதன் பயனாக இந்தியாவின் மின் உற்பத்தி, நகர்ப்புற எரிவாயு விநியோகம் , மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு நிலையான எரிவாயு கிடைக்கும் எனவும் பழைய திட்டமாக இருந்தாலும், தற்போதுள்ள புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்திற்கு இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவி வரும் நிலையிலும், இந்தியா இத்தகையதொரு தொலைநோக்கு மைல்கல் திட்டத்தை முன்னெடுப்பது ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.