

அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என்பது இளைஞர்கள் பலருடைய கனவாகும். தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கு அடுத்து, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் (RRB) நடத்தப்படும் தேர்வுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையின் தற்போது 22,000 குரூப் டி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்ஆர்பி.
இந்த வேலையில் சேர்வதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அவ்வப்போது நிரப்பி வருகிறது. அவ்வகையில் RRB Group D பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு இன்று (ஜனவரி 31) முதல் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் கடைசி தேதி உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI முடித்திருந்தால் போதுமானது.
வயது வரம்பு:
ரயில்வே துறை விதிகளின்படி குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம். இருப்பினும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டு தளர்வுகளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகளும் அளிக்கப்படும்.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 22,000
காலிப் பணியிடங்களின் விவரம்: தண்டவாள பராமரிப்பாளர், பாயின்ட்ஸ்மேன், உதவியாளர்
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 31-01-2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02-03-2026
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://www.rrbchennai.gov.in/ or https://www.rrb.gov.in/
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினர் ரூ.500-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வை எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வை எழுதிய பிறகு அவர்களுக்கு இந்த கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கணினி அடிப்படைத் தேர்வு (Computer Based Test) நடத்தப்படும். தேர்வுக்கு முன்பாக ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெரும் விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்டமாக உடல்திறன் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்புகள் நடைபெறும். இறுதியாக காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
2026 ஆம் ஆண்டில் ரயில்வே துறையில் வெளியாகி இருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு இது. இன்றே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தொடங்குவது தான் நல்லது. ஏனெனில் கடைசி நேரத்தில் நெட்வொர்க் பிரச்சனைகள் அதிகம் வர வாய்ப்புள்ளது என்பதால், கால தாமதமாகி விடும்.