கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
காசா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த அக்டோபரில் தொடங்கிய போர் இன்றுவரை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் சுமார் 18000 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அங்குள்ள மருத்துவமனைகளை குறிவைத்து அதிக தாக்குதல் நடப்பதாக கூறப்பட்ட நிலையில், ஹமாஸ் படையினர் காசாவில் உள்ள மருத்துவமனைகளை பயங்கரவாத நடவடிக்கைக்காக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் அங்குள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. போர் தொடங்கி வெறும் 66 நாட்களில் காசாவின் சுகாதார கட்டமைப்பு நிலைகுலைந்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
காசாவில் தற்போது 11 மருத்துவமனைகள் மட்டுமே இயங்கி வந்தாலும் அவை முழுமையாக இயங்கவில்லை. பல மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால் மக்கள் நிலை குலைந்து துயரத்தை சந்தித்து வருகின்றனர். இத்தகைய நிலை காசாவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் படையினரை முற்றிலுமாக அழிக்கும் வரை இந்த போரை நாங்கள் நிறுத்துவதில்லை என இஸ்ரேல் ராணுவத்தினர் சபதம் எடுத்துள்ளனர். எனவே தொடர்ந்து இங்கு போர் நீடித்தால், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் போகும் என அஞ்சப்படுகிறது.