140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், தனிநபர் கடன் மற்றும் குடும்பங்களின் நிதி நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது. இந்த பதிலில், நாட்டின் ஒட்டுமொத்த கடன் நிலவரம் மற்றும் அரசின் நிதி நிர்வாகம் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மக்களின் நிதி ஆரோக்கியம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய நிதி அமைச்சகம், நாட்டின் பொதுக் கடன் நிலவரம், வெளிநாட்டுக் கடன் மற்றும் வங்கிகளின் வாராக்கடன்கள் குறித்த விவரங்களை வழங்கியது. குறிப்பாக, சமீபத்திய காலங்களில் தனிநபர் கடன்களின் அதிகரிப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து கவனமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கடன் நிலவரம் ரூ.171.78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இது 2024-25 நிதியாண்டில் ரூ.185 லட்சம் கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2025 மார்ச் இறுதியில் 736.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்கள் ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படுவதில்லை என்றும், எனினும், வங்கிகள் தாங்களாகவே இந்த விவரங்களைச் சேகரித்து வருவதாகவும் ஒரு கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் இருப்பதாக கிரெடிட் தகவல் நிறுவனமான சிபில் (CIBIL) தெரிவித்துள்ளது. இந்தக் கடனாளிகளுக்கான சராசரி கடன் அதாவது ஒவ்வொருவருக்கும் தனிதனியாக ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 2023-ல் ரூ.3.9 லட்சமாக இருந்தது. ஆனால், இது மொத்த மக்கள்தொகையின் சராசரி கடன் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தக் கடன்களில் பெரும்பாலானவை உயர் கிரெடிட் மதிப்பெண் கொண்ட நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. அதாவது, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அதிகம் உள்ளவர்கள். ஒரு சொத்தை உருவாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்படும் கடன்கள் என்பதால், இது நேர்மறையாகவே பார்க்கப்படுகிறது. குடும்ப நிதிச் சொத்துகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜி.டி.பி) ஒப்பிடும்போது, 2023-ல் 103.5 சதவீதமாக இருந்தது, இது 2024-ல் 106.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மக்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்துவதையும், நிதி ரீதியாக வலுப்பெறுவதையும் குறிக்கிறது.
இந்த ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.61.47 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 10.1% அதிகம். ஆனால், இந்த வெளிநாட்டுக் கடன் ஜி.டி.பி. விகிதம் 19.1% மட்டுமே என்பதால், இது சீராகவே கட்டுப்பாட்டில் உள்ளது. உலக அளவில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு பாதுகாப்பான அளவாகவே கருதப்படுகிறது.
இந்த தகவல்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் கடன் சுமை ஒரு சவாலாகவே உள்ளது என்பதைக் காட்டுகிறது. அதிகரித்து வரும் கடன் சுமையை நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், நிதி நிலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக பல்வேறு கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.