வாணியம்பாடி - இலவச சேலைக்கான டோக்கன் பெருவதற்காக அதிக அளவில் கூட்டம் - நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் பலி

வாணியம்பாடி - இலவச சேலைக்கான டோக்கன் பெருவதற்காக அதிக அளவில் கூட்டம்   -  நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் பலி

வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் விழாவிற்காக டோக்கன்களை பெற வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியாகினர். 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானம் அருகில் ஐயப்பன் என்பவர் ஜல்லி நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக தைப்பூசத்தன்று இலவச புடவைகள் வழங்கி வருகின்றார்.

இதற்காக டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டோக்கன்கள் பெற சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நிறுவனத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டு இருந்தனர். டோக்கன் வினியோகம் செய்ய நிறுவனத்தின் கேட் திறக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 15 பேர் பெண்கள் மயக்கம் அடைந்தனர்.

கூட்ட நெரிசலால் முன் வரிசையில் நின்றிருந்த வயதானவர்கள் நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் மற்ற பெண்கள் அனைவரும் முன்னோக்கி வந்தபோது கீழே விழுந்த பெண்களை மிதித்தவாறு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நெரிசலில் சிக்கி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்த வாணியம்பாடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முண்டியடித்தவர்களை கலைந்து செல்ல செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்பின் கீழே விழுந்து படுகாயத்துடன் மயங்கி கிடந்த பெண்களை ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

4 மூதாட்டிகள் பலி

அங்கு ஈச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் (வயது 60), குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (60), அரபாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜாத்தி (62), பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மல்லிகா (75) ஆகிய 4 மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

மேலும் வாணியம்பாடியை அடுத்த குரும்பட்டி பகுதியை சேர்ந்த லிங்கம்மாள் (45), லலிதா (40), சின்னம்மாள் (60), பட்டு (55), நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த எல்லம்மாள் (65), தேவஸ்தானம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (80), தும்பேரி பகுதியை சேர்ந்த சின்னம்மாள் (70), உலக்கியமாள் (65), புஷ்பா (50), அரப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த மரகதம் (55), பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (55), புதூர் பகுதியைச் சேர்ந்த பட்டம்மாள் (60) உள்பட 15 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உறவினர்களும் அங்கு பதற்றத்துடன் நின்றிருந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணி முடிந்து சென்ற டாக்டர்களும், செவிலியர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் சிலரது நிலை கவலைக் கிடமாக உள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலுக்கு திருப்பத்தூர் மாவட்டம் திமுக மாவட்ட கழக செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தன்னுடைய தொகுதி நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்தை உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார். அதேபோல படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், ''சேலை வழங்குவதற்காக தனியார் நிறுவனத்திற்கு 5-ந் தேதிதான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்னதாகவே டோக்கன் வழங்குவதை அறிந்த ஏராளமான பெண்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டு 4 மூதாட்டிகள் துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டனர்.

ரூ.2 லட்சம் நிதிஉதவி

வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பேர் பலியானதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த துயர சம்பவத்தை கேள்வியுற்று, நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான 4 பெண்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், கடும் காயம் அடைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இலவச புடைவைக்காக டோக்கன் பெற சென்று கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com