

நமது அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் முதல்வராகவுள்ள திரு சந்திரபாபு நாயுடு,தன் மாநிலத்தில் இரண்டாவது குழந்தை பெறும் தம்பதியருக்கு ரூ25 ஆயிரமும்,மூன்றாம் குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ30 ஆயிரமும்,நான்காம் குழந்தையையும் பெற்றுக் கொள்வோருக்கு ரூ 40 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.அதற்கான காரணமாக அவர் சிலவற்றைக் கூறியுள்ளார்.
முதல் காரணமாக,ஆந்திராவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரி செய்வது.
இரண்டாவதாக,மாநிலத்தின் எதிர்கால மக்கட்தொகை சமநிலையை ஏற்படுத்துவது.
மூன்றாவதாக,வருங்காலத்தில் முதியோர் எண்ணிக்கை கூடி,உழைக்கும் வயதிலுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுப்பது என்கிறார்.
இவர் தற்போது நடைமுறைக்குக் கொண்டு வரும் ஊக்கத்தொகை வழங்கி மக்கள் தொகையை பெருக்கும் திட்டம்,
ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைமுறையில் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போதும் தொடர்கிறதா என்பது தெரியவில்லை.
உலக நாடுகள் பலவும் மக்கள் தொகையை பெருக்குவதில் முனைப்பு காட்டுவதாக அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
கனடா :அயல் நாட்டினர் அந்நாட்டில் குடி புக எளிதான முறைகளை அறிவித்திருந்தது.
ஏன்? சீனா கூட ஒற்றை குழந்தை முறையால்,இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறி இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு மக்களை வற்புறுத்தியுள்ளதாக செய்திகள் வெளி வந்தன.
ஆனால் நம் நாட்டின் நிலை வேறு.உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் உழைக்கும் வயதில் உள்ள இளைஞர்களை நம் நாடே கொண்டுள்ளதாக சில விபரங்கள் தெரிவிக்கின்றன.அது உண்மை என்பதை நிரூபிப்பது போல்,உலகின் பெரும்பாலான நாடுகளில் நம் இளைஞர்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.அமெரிக்காவில்கூட,ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
சமீபத்தில்தான் மக்கள் தொகையில் உலகின் ஒன்றாவது இடத்தில் இருந்த சீனாவைப் பின்னுக்குத் தள்ளி நாம் முதலிடத்திற்கு வந்திருக்கிறோம்.ஜனத்தொகையில் சாதித்த சீனா, உற்பத்தித் துறையிலும் உலகின் நம்பர் ஒன்னாகவே உள்ளது.உலகின் பெரும்பாலான நாடுகளின் மார்க்கட்டுகளில் அதிகம் விற்பனையாவது சீனத்
தயாரிப்புகளே!அதோடு மட்டுமல்ல!விஞ்ஞான முன்னேற்றத்திலும் வியத்தகு மாற்றங்களை அது எய்தி விட்டது.விளையாட்டிலும் சீனர்கள் தொடாத உயரமில்லை.
நாமோதட்டுத் தடுமாறித்தான் மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.நம் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக சொல்லப்படுவது அதிக மக்கள் தொகை தான்.
சுதந்திரம் பெற்ற ஆரம்பத்தில்,மக்களின் பசியைப் போக்கவே பெரும்பாடு பட வேண்டியிருந்தது.அதன்பிறகு அடிப்படை வசதிகளையும்,நீராதார வசதிகளையும் பெருக்கப் போராட வேண்டியிருந்தது. கல்வி,மருத்துவம்,வீட்டு வசதி போன்றவற்றில் இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறையவே உள்ளது.
கோடை காலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் குடிநீர்ப் பிரச்னை பெரும் தலைவலியைத் தருகிறது.
அரசுப் பள்ளிகளின் தரம் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை.தனியார் பள்ளிகளோ பெற்றோரைப் பிழிந்தெடுக்கும் எந்திரங்களாகவே செயல் படுகின்றன.அரசு மருத்துமனைகளில் போதுமான மருத்துவர்கள்,உபகரணங்கள்,கட்டிட வசதிகள்,மருந்துகள் இல்லையென்ற குறை.
தனியார் மருத்துவமனையின் கட்டணங்கள் எளியோர்க்கு எட்டாதவை.இருக்கும் இளைஞர்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லை.இவ்வளவு ஏன்?நம் தமிழ் நாட்டில் அதிகமாக வேலைக்கு வருபவர்கள் ஆந்திராவையும்,பீகாரையும்,பெங்காலையும் சேர்ந்தவர்கள்தானே?
அவர் சொல்வதைப்போல் பெற்றோர் நான்கு குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள வேண்டுமானால்,ஊக்கத் தொகை மட்டும் போதாது.உயர்வான கல்விக்கும்,மருத்துவத்திற்கும்,தடையற்ற வேலை வாய்ப்புக்கும் உத்தரவாதம் ஏற்படுத்தி விட்டு,குழந்தை களைப் பெற்றுக் கொள்ள சொன்னால் அது நியாயம்.அவற்றுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மக்கள் தொகையைப் பெருக்குவது உத்தமமான செயலாகாது.மக்களை
மேலும் சிரமத்தில் தள்ளவே வழி வகுக்கும்!