

ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் உள்ள ரோமின் பகுதியில் மகாத்மா காந்தியின் 426 கிலோ எடையுள்ள வெண்கல சிலை உள்ளது. ஆஸ்திரேலியா - இந்தியா கலாச்சார மையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த காந்தி சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தி தூக்கிச் சென்றுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்டார்ட் மோரிசனால் காந்தியின் வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. காலிஸ்தான் விவகாரம் காரணமாக சிலை சேதப்படுத்தப்பட்டதாக அப்பொழுது கூறப்பட்டது.தற்போது அந்த சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலால் (ICCR) 426 கிலோ எடையுள்ள காந்தியின் வெண்கல சிலை பரிசாக ஆஸ்திரேலியாவிற்கு வழங்கப்பட்டது.ஆங்கிள் கிரைண்டர்' (Angle grinder) கருவியைப் பயன்படுத்தி சிலையை மர்ம நபர்கள் அறுத்து சென்றுள்ளதால் சிலையின் பாதங்கள் மட்டும் அங்கேயே விடப்பட்டுள்ளன.
ஜனவரி 12 ,2026 அன்று அதிகாலை 12.50 மணி அளவில் இந்த வெண்கல சிலை திருடப்பட்டதாக தெரிகிறது. போலீசார் இந்த சிலை திருட்டு விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்டோரியா காவல்துறையினர் இச்சிலைத் திருட்டில் மூன்று பேர் ஈடுபட்டிருக்கலாம் என சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் சந்தேகப்படுகின்றனர்.
மேலும் பழைய இரும்பு வியாபாரிகள் யாராவது இதுபோன்ற வெண்கல சிலையை விற்பனை செய்ய வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். "மகாத்மா காந்தி அகிம்சையின் அடையாளம்.அவரது சிலையை உடைத்து திருடியது மிகவும் வருந்தத்தக்கது" என ஆஸ்திரேலியா அதிகாரிகளிடம்,இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்தியா சார்பில் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் திருடப்பட்ட மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை கண்டுபிடிப்பதோடு திருடிய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.