

உலகில் மிகவும் அச்சுறுத்தல் தரும் நோய்களுள் புற்றுநோய் முதன்மை இடத்தில் உள்ளது. புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி அதிகமாக வளர்ந்து, அருகிலுள்ள திசுக்களை சேதப்படுத்தும் ஒரு கொடிய பாதிப்பாகும்.
சாதாரணமாக செல்கள் வளர்ந்து, பழையவை இறந்து புதியவை உருவாகும். ஆனால் சில சமயங்களில் மரபணு மாற்றங்கள் காரணமாக செல்கள் கட்டுப்பாடின்றி பெருகி ஆபத்தற்ற கட்டியாகவும் மற்றும் புற்றுநோய் கட்டியாகவும் உருவாகலாம். இது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவலாம் . இதுவே புற்றுநோய் அடிப்படை.
இதில் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்று, குடல்புற்று, கர்ப்பப்பை புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் , கல்லீரல் புற்றுநோய் என பலவகைகள் உண்டு. இந்தியாவிலும் மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்று மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகமாக காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து கட்டி உருவாகும் புற்றுநோய். உலகளவில் அதிகமாக காணப்படும் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்று.
நுரையீரல் புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்வார்கள்.நுரையீரலின் ஒரு பகுதி அல்லது ஒரு முழு நுரையீரல் அகற்றப்படும். ஆரம்ப கட்ட நோயாளிகளுக்கு இது நல்ல பலன் தரும்.
பொதுவாக கீமோதெரபி எனப்படும் சிகிச்சை புற்று செல்களை அழிக்கும் மருந்துகள் ஊசி அல்லது மாத்திரையாக வழங்கப்படும். முடி உதிர்தல், வாந்தி, சோர்வு நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகிய பக்க விளைவுகள் ஏற்படும். அடுத்து கதிர்வீச்சு சிகிச்சையில் அதிக ஆற்றல் கதிர்களைப் பயன்படுத்தி புற்று செல்களை அழிக்கப்படுகிறது.இவை அனைத்தும் பக்க விளைவுகள் மற்றும் வலி உடல் வேதனைகளை அளிக்கும்.
இவைகளுக்கு மாற்றாக பிரபல மருந்து நிறுவனமான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோச் ஃபார்மா இந்தியா, "டெசென்ட்ரிக்" (Tecentriq) என்ற பெயரில் 7 நிமிடங்களில் செலுத்தக்கூடிய, ரூ.3,70,000 மதிப்பிலான அதிநவீன "அடெசோலிசுமாப்" (Atezolizumab) என்னும் புற்றுநோய் ஊசியை அறிமுகப்படுத்தியுள்ளது .இந்த ஊசி, அதிக நேரம் எடுக்கும் கீமோதெரபி சிகிச்சையை போல் இல்லாமல் வெறும் 7 நிமிடங்களில் செலுத்தப்படும் என்பது சிறப்பு. நோயாளிகள் இந்த ஊசியை குறைந்தது 6 முறையாவது செலுத்த வேண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுரையீரல் புற்றுநோய்க்கான இந்த “7 நிமிட ஊசி” என்பது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒரு புதிய இம்யூனோதெரபி (Immunotherapy) சிகிச்சை முறையாகும். இது மருத்துவ உலகில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
முன்பு இந்த மருந்து நரம்பு வழி திரவமாக 1 லிருந்து 3 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது தோலுக்கடியில் செலுத்தும் ஊசி வடிவில் சுமார் 5 லிருந்து 7 நிமிடங்களில் செலுத்த முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் செலுத்தப்படும் மருந்து புற்றுநோய் செல்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை ஏமாற்றி மறைந்து விடும். உடலின் ஏதிர்ப்பு சக்தியை மீண்டும் செயல்படுத்துகிறது.புற்று செல்களை அடையாளம் கண்டு தாக்க உதவுகிறது.
குறிப்பாக அட்வான்ஸ் ஸ்டேஜ் அல்லது அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் வராமல் தடுக்கும் நோக்கில் இந்த ஊசி பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதன் விலை மிக மிக அதிகம் என்பதால் அனைவருக்கும் பயனளிக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.