மலையாள நடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படம் ஒன்று பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது. அவர் எடுத்த புகைப்படம் என்னவாக இருக்கும்? எவ்வளவு தொகைக்கு ஏலம் போயுள்ளது? புகைப்படத்தை வாங்கியவர் யார் என்று இந்த பதிவில் காணலாம்.
மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டிக்கு சினிமா நடிப்போடு புகைப்படங்கள் எடுப்பதும் மிகவும் பிடித்தமான ஒன்றாக கருத்தப்படுகிறது. பொழுதுபோக்கிற்காக புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வார் எனவும், இதற்காகவே புதிய மாடல் கேமராக்கள் மற்றும் லென்ஸ்கள் போன்றவற்றை அவர் சேகரித்து வைத்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இதுவரை அவரது கேமராவில் பல வகையான புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில், சமீபத்தில் அவர் எடுத்த 'புல்புல்' எனப்படும் 'கொண்டைக்குருவி' புகைப்படம் வைராகிக்கியுள்ளது. இந்த புகைப்படத்தை தொழிலதிபர் அச்சு உல்லட்டில் என்பவர் வாங்கியுள்ளார்.
இந்துச்சூடன் என்ற புனைப்பெயரால் கேரளாவில் பிரபலமாக அறியப்படுபவர் மறைந்த எழுத்தாளர் கே.கே.நீலகண்டன். இவர் பறவைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய `பேர்ட்ஸ் ஆஃப் கேரளா' என்ற புத்தகத்தின் மூலம் 261 வகையான பறவைகளை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவரின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொச்சியில் 3 நாள்கள் புகைப்படக் கண்காட்சி நடைப்பெற்றுள்ளது.
எர்ணாகுளத்தில், தர்பார் ஹாலில், இந்துச்சூடன் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் இந்தப் புகைப்படக் கண்காட்சி நடைப்பெற்றது. அந்த கண்காட்சியில் உலகப் புகழ்பெற்ற ஜேனி குரியகோசின் மற்றும் நடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படம் உட்பட மொத்தம் 23 புகைப்படக் கலைஞர்களின் 61 புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றுள்ளது.
கண்காட்சியில், மம்மூட்டி எடுத்த `புல் புல்’ எனப்படும் `கொண்டைக்குருவி’யின் புகைப்படத்தை தொழிலதிபர் அச்சு உல்லட்டில் என்பவர் ரூ.3 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.
"கோழிக்கோட்டில் விரைவில் திறக்க உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் இந்தப் புகைப்படம் இடம் பெறும். இந்த ஏலத்தின் மூலமாகக் கிடைக்கப்பெற்றுள்ள தொகை, புகைப்படக் கண்காட்சியை நடத்தும் இந்துச்சூடன் அறக்கட்டளை சார்பில், கேரள பறவைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்படும்,” என்று அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான நடிகர் வி.கே.ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.