

ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சர், அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் இதனை வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று பட்ஜெட் தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி, கால்நடைத் துறை அமைச்சர் கமலி மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் ஆவின் பால் வினியோகம், கால்நடை பராமரிப்பு மற்றும் அவற்றின் செயல்பாடுகள் உள்ளட்டவை குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆவின் பால் கொள்முதல் தொடர்பாகவும், விநியோகம் தங்கு தடையின்றி கிடைப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க அறிவுறுத்தி இருக்கிறார். ஆவின் பால் வினியோக சங்கிலியை விரிவுபடுத்தவும், தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தின் தரத்தை உயர்த்துவதற்கு உண்டான பணிகளை தொடங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் இந்த ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, ஆவின் நிறுவனம் மூலமாக பால் கொள்முதலை அதிகரிப்பது தொடர்பாக விரைவில் தமிழ்நாடு அரசு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது தான் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
சென்னை முழுவதும் அனைத்து வகையான பால் வகைகளையும் ஆவின் நிறுவனம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து விநியோகித்து வருகிறது. சமீபகாலமாக ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கொள்முதல் விலையை உயர்த்தாததே என்று கூறப்படுகிறது.
ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயா்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 9-ந் தேதி இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 அதிரடியாக உயர்த்தியது. தனியார் பால் நிறுவனங்கள், பால் வணிகத்தை தக்கவைத்துக்கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருகின்றன. இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, பால் விலையை உயர்த்தி உள்ளன. ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
தனியார் பால் நிறுவனங்கள் பால் வணிகத்தை தக்கவைத்துக்கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வரும் நிலையில் ஆவின் நிறுவனமும் அதற்கு ஈடாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே இன்று முதமைச்சர் விஜய் பால் கொள்முதலை அதிகரிக்க உத்தரவிட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.