
நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவின் 2-வது திருமணம் ஹைதராபாத்தில் நாகார்ஜுனாவின் குடும்பத்துக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இருவீட்டு குடும்பத்தினர், நடிகர்-நடிகைகள் சூழ கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஸ்டூடியோ 1976-ம் ஆண்டில் அவரது புகழ்பெற்ற தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களால் நிறுவப்பட்டது. பஞ்சாரா ஹில்ஸில் உள்ள இந்த 22 ஏக்கர் கொண்ட அன்னபூர்ணா ஸ்டூடியோ குடும்பப் பெருமையின் அடையாளமாக இருந்து வருகிறது. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நாக சைதன்யா அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார்.
இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றித்திரிந்த புகைப்படங்கள் எல்லாம் லீக்கான நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நாக சைதன்யா சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதன்படி, சமீபத்தில் நடந்த ஏ.என்.ஆர் விருது வழங்கும் விழாவிலும் இருவரும் கலந்துகொண்டார்கள். அதேபோல், தீபாவளியையும் இணைந்து கொண்டாடினார்கள். சோபிதா துலிபாலா மாடல் அழகியாக இருந்து, அதன் பின்னர் சினிமாவில் நடிக்க வந்தவர். சோபிதா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானமாதேவி கேரக்டரில் நடித்தவர்.
நடிகர் நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமி டகுபதிக்கும் கடந்த 1986ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்தவர்தான் நாக சைதன்யா. நாகார்ஜுனா தனது முதல் மனைவியை பிரிந்துவிட்டு நடிகை அமலாவை 2-வதாக திருமணம் செய்த நிலையில், அவருடைய மகனான நாக சைதன்யா தனது முதல் மனைவி சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை சோபிதா துலிபாலாவை இன்று 2-வதாக திருமணம் செய்துக் கொள்கிறார்.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா, இவர், 2009 ஆம் ஆண்டு வெளியான 'ஜோஷ்’ திரைப்படத்தின் மூலம்தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். தற்போது, டாப் ஹீரோவாகவும் இருந்து வருகிறார். அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார். இந்த காதல் திருமணத்தில் முடிந்து விரைவில் விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலா திருமணம் நடந்து முடிந்த பிறகு, நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் கல்யாண போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
மேலும், அவர் தனது மருமகள் சோபிதாவை குடும்பத்திற்கு வரவேற்று ஒரு நெகிழ்ச்சியான மெசேஜ்ஜை ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "இந்த அழகான அத்தியாயத்தை சோபிதாவும் சைதன்யா ஒன்றாகத் தொடங்குவதைப் பார்ப்பது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. என் அன்பான சைதன்யாவுக்கு வாழ்த்துகள்.. அன்புள்ள சோபிதா.. ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் நீ மகிழ்ச்சியைக் கொண்டு வந்துவிட்டாய். ஏ.என்.ஆரின் (நாகார்ஜுனாவின் தந்தை) சிலையின் கீழ் திருமணம் நடந்துள்ளது. இது இன்னும் ஆழமான அர்த்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவரது அன்பும் வழிகாட்டுதலும் இருப்பது போல் உணர்கிறேன். எங்கள் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். நாகார்ஜுனா இந்த ட்வீட்டை போட்ட சில நிமிடங்களிலேயே இது டிரெண்ட் ஆனது.