தமிழகத்தில் ஐந்து இடங்களில் கூடுதல் இருப்புப் பாதைகள் - தென்னக ரயில்வே முடிவு!

தமிழகத்தில் ஐந்து இடங்களில் கூடுதல் இருப்புப் பாதைகள் - தென்னக ரயில்வே முடிவு!

சென்னை மாநகரத்தில் ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 600 கி.மீ தூரத்திற்கு புதிய இருப்புப் பாதைகள் அமைக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்தை முன்னிட்டு, மாற்று வழியாக இத்தகைய இருப்புப் பாதைகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக எங்கெல்லாம் கூடுதல் இருப்புப் பாதைகள் தேவைப்படுகின்றன என்பதை ஆய்வு செய்து, 5 இடங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். 11 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் இருப்புப் பாதைகள், அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள இடங்களில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து இடங்களில் கூடுதலாக உருவாக்கப்படும் இருப்புப்பாதைகளால் சரக்கு ரயில்களுக்கும் நீண்ட தூரம் செல்லும் ரயில்களுக்கும் வசதியாக இருக்கும்.

ஜோலார்பேட்டைக்கும் கோயம்புத்தூருக்கும் இடையே 282 கி.மீ தூரத்தில் வரவிருக்கும் கூடுதல் இருப்புப்பாதையால் சென்னைக்கும் பெங்களூருக்கும் வந்து செல்லும் நீண்ட தூர ரயில்களுக்கு வசதியாக இருக்கும். கோயம்புத்தூரிலிருந்து ஷோரனூருக்கு 99 கி.மீ தூரத்தில் ஒரு இருப்புப்பாதை அமைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் தென்பகுதிகளை இணைப்பதற்கு உதவும்.

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் ஜங்ஷனுக்கு 96 கி.மீ தூரம் கூடுதல் இருப்புப்பாதையும் அமைக்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளை இணைக்கும் மாற்று வழியாக இது அமையும். அரக்கோணத்திற்கும் ரேணிகுண்டாவுக்கும் இடையே 68 கி.மீ தூரத்தில் கூடுதல் பாதைகளும் அமைக்கப்படுவதால் மும்பை செல்லும் ரயில்களுக்கு வசதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தாம்பரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையே நான்காவது லைன் வர இருக்கிறது. தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்து வந்து சேரும் ரயில்கள் தாமதமாகிவிடும் என்பதால் செங்கல்பட்டுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து பெரும்பாலும் தாமதமாகிவிடுகிறது.

மாற்றுப் பாதைகள் கூடுதலாக வரும்போது தென் தமிழ்நாட்டிலிருந்து வரும் ரயில்கள் குறித்த நேரத்தில் தாம்பரம் வந்து சேரும். அதே நேரத்தில் மின்சார ரயில்களும் குறித்த நேரத்திற்கு இயக்கப்படும். இது தவிர சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டிற்கு இன்னும் நிறைய மின்சார ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

செங்கல்பட்டு பகுதிகளிலிருந்து வேலை நிமித்தம் காரணமாக தினமும் சென்னைக்கு வந்து சேரும் பயணிகளுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் மகிழ்ச்சியான செய்திகள் ஏகப்பட்டவை காத்திருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com