நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) கலை அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இளநிலை படிப்பில் சேர்ந்து படிப்பதில் வயதில் தளர்வு கோரி தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருந்தனர். இதனை அடுத்து கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளான பிஏ, பிஎஸ்சி போன்ற படிப்புகளில் சேருவதற்கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 43 ஆகவும் உயர்த்தி தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது, கலை அறிவியல் கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ போன்ற இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கான வயது வரம்பு 21 ஆக இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசி-முஸ்லிம் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பெண்களுக்கும் 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் (2025-2026) கலை அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி பயில விரும்பும் ஆர்வமுடைய மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும், மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான உச்ச வயது வரம்பை அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 40 என நிர்ணயித்து ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டார்.
அக்கருத்துருவை ஆய்வு செய்து 2025-2026-ம் கல்வி ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் வயது தளர்வும் (45 வயது வரை), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் வயது தளர்வும் (43 வயது வரை) அளித்து அரசு ஆணை ஒன்றை உயர்கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் டாக்டருக்கு படிக்க நீட் தேர்வை எந்த வயதிலும் எழுதலாம். இந்திய பார் கவுன்சிலின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, சட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கவும் வயது உச்சவரம்பு தளர்த்தப்பட்டிருந்தது.
தற்போது கலை அறிவியல் படிப்பு படிக்கவும் 40 வயது வரை என்று வயது வரம்பு தளர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.