

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் எஸ்பி.வேலுமணி தலைமையில் அதிமுக இரண்டாக பிரிந்தது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தரப்பினர் 25 எம்எல்ஏ-க்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே இரு தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. நான்கு எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவுக்குப் பிறகு, தற்போது அதிமுக ஒன்றிணைந்துள்ளது.
நேற்று முன்தினம் (மே 25) மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய மூவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெக-வில் இணைந்தனர். அதேபோல் நேற்று (மே 26) அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தார்.
இதேநிலைத் தொடர்ந்தால் அதிமுக மேலும் பிளவுபட்டு விடும் என்பதை கருத்தில் கொண்டு இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் ஒன்றாக இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுகவின் முக்கிய நிர்வாகி வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று (மே 26) அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வீட்டில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.
இதன் முடிவில் இரு பிரிவினரும் ஒன்றாக இணைவது தான் அதிமுகவிற்கு நல்லது என்பதை உணர்ந்து, தற்போது ஒன்றிணைந்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக ஐடி விங், அதிமுகவின் எஃகு கோட்டையை இனி யாராலும் பிரிக்க முடியாது என பதிவிட்டுள்ளது.
இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சபாநாயகரிடம் அளித்த புகாரை திரும்ப வாபஸ் பெறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு பறிக்கப்பட்ட பதவியை மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதோடு வழிகாட்டுநர் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டது.
தற்போது இதில் சமரச முடிவு எட்டப்பட்டு, இருவரும் ஒன்றிணைந்துள்ள நிலையில் இனி அதிமுக வலிமையான கட்சியாக தமிழகத்தில் உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், அந்த 5 தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக தீவிரமாக முனைப்பு காட்டும் என்று கருதப்படுகிறது.
தற்போது அதிமுக வசம் 43 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.