

தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் இந்த கட்சியில் சேர்வதற்காக பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அதிமுக நிர்வாகிகள் அந்த கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது .
ஏற்கனவே 3 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்பொழுது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேர் உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பெஞ்சமின் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ், சிவகாசி முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், கலசப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். இந்த அதிரடி கட்சித்தாவல் நிகழ்வானது அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் அதிமுகவில் உட்கட்சி பூசலும் அதிருப்தியும் நிலவி வரும் சூழலில், இந்த மூத்த நிர்வாகிகள் கட்சி மாற இருப்பது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவிலிருந்து நடைபெற்ற இந்த திடீர் விலகல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்த உட்கட்சி பூசல்கள் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தி அடைந்திருந்த தலைவர்கள் பலர் தவெகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.