

உலகளவில் தொழில்நுட்பத் துறையை ஆட்டிப் படைத்து வருகிறது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம். கிட்டத்தட்ட பெரும்பாலான துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் வரவுக்குப் பிறகு, பெரும்பாலானோர் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என வல்லுநர்கள் கணித்தனர். அதற்கேற்ப பல ஐடி நிறுவனங்கள் வேலையிழப்பு நடவடிக்கையை செய்து வருகின்றன.
இதற்கிடையில் ஏஐ தொழில்நுட்பத்தை மனித குலத்தை பாதுகாக்கவும் பயன்படுத்த முடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது நிரூபித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தியது. இந்த வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த பிறகே இதன் தாக்கம் குறைந்தது.
இந்நிலையில் அனைத்து வகையான கொரோனா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படும் வகையில், ஏஐ உதவியுடன் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். இந்தத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், 39 தன்னார்வலர்களுக்கு சோதனை முறையில் செலுத்தப்பட்டது.
சோதனையின் முடிவில் எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத இந்தத் தடுப்பூசி வெற்றி பெற்றதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வகையான கொரோனா வைரஸ்களின் மரபணு குறியீடுகளை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ந்து, சூப்பர் ஆன்டிஜென் மூலம் இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ‘pEVAC-PS’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஊசி வழியாக இல்லாமல், ‘மைக்ரோ ஃபுளூயிட் ஜெட் சிஸ்டம்’ என்ற ஊசியில்லாத நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 39 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசி உடலுக்குள் செலுத்தப்பட்டதும், அனைத்து வகையான கொரோனா வைரஸ்கள் மட்டுமின்றி, விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ள வைரஸ்களுக்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு திறனைத் தூண்டியது.
இது தவிர வருங்காலத்தில் வைரஸ் எத்தனை முறை உருமாறினாலும், அவற்றுக்கு எதிராகவும் இந்தத் தடுப்பூசி திறம்பட செயல்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வைரஸ்கள் உருமாறிய பிறகு தடுப்பூசியை தயாரிக்கும் நிலைமை மாற்றப்பட்டு, எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப தடுப்பூசியை வடிவமைக்கும் முறை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
தற்போது முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்திருக்கும் சூழலில், இரண்டாவது கட்டமாக 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி சோதனையை மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்ததாக எபோலா வைரஸ், பறவைக் காய்ச்சல் மற்றும் இன்ஃப்ளூயன்சா போன்ற அதிக பாதிப்பை தரக்கூடிய வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படும் ஏஐ தடுப்பூசிகளை கண்டறியும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
ஏஐ தடுப்பூசி மருத்துவ உலகில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் மனித குலத்தை அபாயகரமான வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகளும், மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.