

சென்னை ஆர்.ஏ.புரத்தில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் இருவரும் ஆலோசனைக்குப் பிறகு ஒரே காரில் புறப்பட்டனர்.
சற்று முன் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டில் எஸ்.பி. வேலுமணி இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெகவை ஆதரிக்க உள்ளதாக வெளியான தகவலை சி.வி. சண்முகம் மறுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தவெகவுக்கு அதிமுக ஆதரவு தரும் விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் அதிமுகவை இரண்டாக உடைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
விஜயின் தவெக கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே களம் இறங்கி முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை வென்று திமுக, அதிமுக இரண்டையும் பின்தள்ளி இருப்பது தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத ஒரு அரசியல் திருப்புமுனையாகவே பார்க்கப்படுகிறது. விஜய் கூட்டணி ஆட்சி என அறிவித்திருப்பதால் அவருடன் கூட்டணியில் இணைவதற்காக மற்ற கட்சிகளிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. சி.வி. சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. சி.வி. சண்முகத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றோர் ஆதரவு அளித்திருப்பதாக கூறப்படுவதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முக்கியமான முன்னேற்றமாக இன்று சென்னையில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி, கே.சி. கருப்பண்ணன் போன்ற அதிமுக நிர்வாகிகள் வந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சி.வி. சண்முகத்திடம் அதிமுக, தவெகவிற்கு ஆதரவு அளிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது குறித்து கட்சியின் தலைமையே முடிவெடுக்க வேண்டும் என்று பதிலை தந்தார். இந்நிலையில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரின் திடீர் ஆலோசனை அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலோசனைக்குப் பிறகு சென்னை ஆர்.ஏ.புரத்தில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் இருவரும் ஒரே காரில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க புறப்பட்டனர்.