

நாட்டில் பால் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இந்நிலையில் பால் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்காக மத்திய அரசு தற்போது களத்தில் இறங்கியுள்ளது. மேலும் பால் பொருட்களின் மீது தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதனை உடனே தடுக்க வேண்டும் என இந்திய உணவு தர நிர்ணய கண்காணிப்பு அமைப்பு (FSSAI), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சிறப்பு அமலாக்கப் பணியைத் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருவதாக அதிக அளவில் புகார்கள் எழுந்துள்ளன. கலப்படம் நிறைந்த பால் பொருட்களால் பொதுமக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் என்பதால், உடனடி நடவடிக்கை எடுக்க FSSAI தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் குறிப்பாக பால்கோவா மற்றும் பனீர் ஆகிய 2 பால் பொருட்களில் கலப்படம் மற்றும் தவறான பிராண்டிங் உள்ளிட்டவை குறித்து விரைவில் ஆய்வு நடத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஆங்காங்கே தவறான பிராண்டிங் பெயரில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் விதமாக சுகாதாரற்ற முறையில் பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன இது குறித்த புகார்கள், கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மத்தியில் அதிகளவில் எழுந்துள்ளன.
இந்நிலையில் உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவுத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் போது பால் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துவர். ஆய்வு முடிவில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதியானால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்தல், கடைகளுக்கு சீல் வைத்தல் மற்றும் கலப்படமான பால் பொருட்களைப் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள எடுக்கப்பட உள்ளன.
பொதுமக்களும் பால் பொருட்களை வாங்கும் போது கவனமுடன் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை உடனுக்குடன் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு ஒரு முறை விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் FSSAI உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006, பிரிவு 16(5)-இன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. தரமான பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவும், நுகர்வோர்களை பாதுகாக்கவும் FSSAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதம் பண்டிகை காலங்களில் அதிக அளவிலான பால் பொருட்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விரைவில் பொங்கல் பண்டிகை வர விருப்பதால் பால் பொருள்களுக்கா தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு FSSAI இந்த முடிவை எடுத்துள்ளது