

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களால் தளபதி என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய், தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தேர்தல் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரது காதல் மனைவி சங்கீதா இன்று மதியம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விஜய் லண்டனை சேர்ந்த தொழிலதிபதியின் மகளான சங்கீதாவை காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. இனிமையாக போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கைக்கு பரிசாக , ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். 26 ஆண்டுகளுக்கு மேலாக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கை சமீப காலமாக சிக்கல்களை சந்திப்பதாக கூறப்படுகிறது.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஒரு சிறந்த தம்பதியாகப் பார்க்கப்பட்ட இவர்களுக்குள் சமீப காலமாகப் பிணக்குகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. சமீப காலமாக விஜயின் திரைப்பட விழாக்களிலும் ,அவர் கலந்து கொள்ளும் விழாக்களிலும் அவரது மனைவி கலந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தார். அவரது மனைவி மட்டுமல்லாமல், அவரது மகனும் கூட பொது நிகழ்ச்சிகளில் விஜய்யுடன் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார். மேலும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கும் போதும் அவரது மனைவி சங்கீதா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இது பற்றி முன்பே பல யூ டியூபர்கள் தங்களது சேனல்களில் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஆயினும் பொதுவெளியில் இது சம்பந்தமாக எந்த ஒரு தகவல்களும் வெளிவரவில்லை. அதனால் ரசிகர்கள் அனைவரும் இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் விஜயின் மனைவி சங்கீதா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்திருப்பது , விஜய் ரசிகர்கள் மத்தியிலும் , அவரது கட்சி தொண்டர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.