

நீங்கள் அதிகம் செல்ஃபி புகைப்படங்களை பகிர்பவரா? அதிலும் இரு விரல்களை காட்டி ஸ்டைலாக போஸ் தந்து சமூக வலைதளங்களில் லைக் வாங்குபவரா? உங்களுக்கான எச்சரிக்கைத் தகவல் தான் இது.
அன்று ரேகை பதிதல் அல்லது கையெழுத்து போடுதல் என்று இருந்த நிலை மாறி கல்வியும் டெக்னாலஜியும் முன்னேறிய இன்றைய டிஜிட்டல் உலகில் பாதுகாப்புக்காக கைரேகை, முகம் அறிதல் போன்ற பயோமெட்ரிக் முறைகளுக்கு மாறி உள்ளோம்.அதிலும் தற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் அவசியம் ஆகி விட்டது நிலையில் அவரவர் எண்ணங்களை சுயமிகளுடன் ( செல்ஃபி) படங்களாகப் பகிர்வதும் வெகுவாக அதிகரித்துள்ளது.
சாதாரணமாக செல்ஃபி புகைப்படம் எந்த ஆபத்தும் தராது. ஆனால் கை விரல்களைக் காட்டிப் போடும் புகைப்படங்களால் வங்கிப் பணம் திருடப்படலாம் என்ற ஆபத்து குறித்து சீனாவில் உள்ள பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரிக்கை தந்துள்ளார்.
உயர் தர கேமரா மற்றும் AI தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களில் தெரியும் விரல் ரேகைகளை திருடும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு ரியாலிட்டி ஷோவில், பிரபலம் ஒருவர் ‘V’ போஸ் தந்து எடுத்த செல்ஃபியில் விரல்கள் எவ்வளவு தெளிவாக தெரிகின்றன என்பதை காட்டி விளக்கி உள்ளார். அவரது ஆய்வுப்படி, புகைப்படம் 1.5 மீட்டர் தூரத்துக்குள் எடுக்கப்பட்டு, விரல்கள் நேராக கேமரா நோக்கி இருந்தால், கைரேகைத் தகவலை முழுமையாக எடுக்க முடியும் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், சில நிபுணர்கள், கைரேகைகளை திருடி தவறாகப் பயன்படுத்துவது இப்போதைக்கு அவ்வளவு எளிதல்ல என்றும் கூறுவது சற்றே நிம்மதி அளிக்கிறது.
எனினும் ஒருவரின் பயோமெட்ரிக் தகவலை முழுமையாக நகலெடுக்க, ஒளி அமைப்பு, படத்தின் தெளிவு உள்ளிட்டவைகள் சரியாக இருக்க வேண்டும் . இருந்தாலும், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், பாதுகாப்பு நிபுணர்கள் இதை வருங்காலத்தில் பெரிய அச்சுறுத்தலாகக் காண்கிறார்கள்.
காரணம் செயற்கை நுண்ணறிவு மூலம் படத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால் கைரேகை பற்றிய தகவலை எடுத்து பயோமெட்ரிக் பாதுகாப்பை உடைக்க முடியும். இதை பயன்படுத்தி, இணைய குற்றவாளிகள் நமது வங்கி கணக்குகளுக்கும் நுழையலாம். அப்படி வங்கிக் கணக்கு அவர்கள் வசம் வந்தால் நமது பணம் அவர்கள் இடம் போகும் வாய்ப்பு அதிகம்..
இதைத் தவிர்க்க விரல் முனைகள் கேமராவை நேராக நோக்கி இருக்கும் குளோஸ்அப் புகைப்படங்களை தவிர்க்கலாம். உயர்தரமான படங்களை பொதுவாக பகிரும்போது கவனம் தேவை. கைவிரல் ரேகை மட்டுமின்றி பதில் பின் ( pin) போன்ற இரட்டை பாதுகாப்பு பயன்படுத்துவது நல்லது.
சாதாரண சோஷியல் மீடியா புகைப்படங்களில் இருந்து உடனே ரேகை திருடப்படுவது எளிதான விஷயம் அல்ல என்றும் சில சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் சமூக வலைதளங்களில் செல்ஃபி படங்களை பகிரும் போது கவனமாக இருப்பது நல்லது.