

குதிரைகளுக்கு பரவும் கிளாண்டர்ஸ் நோய் மனிதர்களுக்கும் பரவலாம் என கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குதிரை, கழுதை போன்ற விலங்குகளை தாக்கும் 'கிளாண்டர்ஸ்' நோய்த் தொற்று சென்னையில் குதிரை ஒன்றுக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதால், கால்நடை பராமரிப்புத் துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.இது 'பர்கோல்டீரியா மல்லி' (Burkholderia mallei) என்ற பாக்டீரியாவால் குதிரை, கழுதை, கோவேறு கழுதை போன்ற விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தான நோயாகும் .
பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சில், மூக்கு சளி, சிறுநீர் மற்றும் தோல் புண்களிலிருந்து மற்ற விலங்குகளுக்குப் பரவுகிறது என்பதால் பாதிக்கப்பட்ட குதிரைகளுடன் தொடர்பில் இருந்த அனைத்து குதிரைகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது ஒரு 'ஸூனோடிக்' (Zoonotic) நோய் என்பதால் பாதிக்கப்பட்ட குதிரைகளுடன் நேரடித் தொடர்பு கொள்பவர்களுக்கும் இந்த நோய் எளிதில் தொற்றலாம். குறிப்பாக இவற்றை நேரடியாக தொடுதல் அல்லது சுவாசிப்பதன் மூலம் பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட விலங்குகளின் கழிவுகள் அல்லது உபகரணங்கள் மூலம் மறைமுகமாகவும் பரவக்கூடும். ஆகவே தமிழகம் முழுவதும் உள்ள குதிரை வளர்ப்போர் மற்றும் பராமரிப்பாளர்கள் முறையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE, முகக்கவசம்) அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள 140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
மனிதர்களுக்கு இந்த நோய் தாக்கும் போது குளிர் மற்றும் வியர்வையுடன் கூடிய தீவிர காய்ச்சல்தசை வலி மற்றும் தலைவலிமார்பு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம்தோலில் கடுமையான புண்கள் மற்றும் மூக்கில் சளி வடிதல் போன்ற அறிகுறிகள் காணலாம். இப்படி தெரிந்ததால் உடனடியாக மருத்துவரை ஆலோசனை பெறுவது அவசியம்.
மேலும் விவரங்களுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் உலக சுகாதார அமைப்பு வலைத்தளத்தில் கிளாண்டர்ஸ் பக்கம் சென்று கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் நோயின் தீவிரத்தன்மை குறித்து அறிய அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து பின்பற்றுவது அவசியம் எனவும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, தொற்று பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.