

உலகமே இன்று செயற்கை நுண்ணறிவு என்னும் ஏஐ தொழில்நுட்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஏஐ, தற்போது மருத்துவத் துறையையும் விட்டு வைக்கவில்லை.
அனைத்து துறைகளிலும் ஏஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் கைகோர்த்துள்ளது ஆந்திர மாநில அரசு.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. ஆந்திராவில் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதோடு பொதுமக்கள் பயன்பெறும் விதமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
அவ்வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மருத்துவத் துறையில் பயன்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடாக பல்வேறு நவீன வசதிகள், அரசு மருத்துவமனைகளிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசு மருத்துவைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்தி, ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டரை வழங்கும் புதிய திட்டத்தை கொண்டு வர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
செயற்கை நுண்ணுறிவின் வளர்ச்சியால் இன்று பல துறைகளில் ஆட்டோமெட்டிக் வசதிகள் அதிகமாகியுள்ளன. இதன் காரணமாக பெருமளவு நேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், இளைஞர்கள் ஏஐ துறையில் சிறந்து விளங்கினால் மட்டுமே வேலையை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் மருத்துவத் துறையிலும் ஏஐ டாக்டர் வந்து விட்டால், அது மருத்துவர்களின் வேலைக்கும் ஆபத்தை உண்டாக்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த ஏஐ தொழில்நுட்பம் அவசியம் என ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்தாண்டு ஏற்கனவே கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவத் துறையிலும் ஏஐ பயன்பாடு கொண்டு வரப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஆந்திராவில் மருத்துவ சேவைகளை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் தற்போது ஏஐ தொழில்நுட்ப அடிப்படையிலான டாக்டரை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இனி ஆந்திர மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டரை வழங்கும் புதிய திட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் நடந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதனால் வெகு விரைவில் நாட்டிலேயே முதன்முறையாக ஏஐ டாக்டரை ஆந்திர அரசு அறிமுகப்படுத்த உள்ளது” என முதல்வர் பெருமிதமாக கூறினார்.