

சென்னையில் பேருந்து பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதை எளிமையாக்கும் விதமாக ஆன்லைன் வழியாக டிக்கெட் விநியோகிக்கப்பட்டு வரும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் யுபிஐ வழியாகவும் டிக்கெட்டுகளை பெரும் நடைமுறை அமலில் இருந்தது.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் (MTC) பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகர பேருந்துகளில் ஆன்லைன் பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகமாக தடை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் எப்போதுமே அதிகரித்து காணப்படும். இந்த நேரங்களில் நடத்துனருக்கு டிக்கெட் வழங்குவதில் கடுமையான சிரமங்கள் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டும், பயணிகளின் வசதிக்காகவும் ஆன்லைன் டிக்கெட் முறையை சென்னை போக்குவரத்துக் கழகம் கொண்டு வந்தது.
கடந்த சில மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த இந்த நடைமுறைக்கு, பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ‘சென்னை ஒன் (Chennai One) செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஏராளமான ஆன்லைன் டிக்கெட்டுகள் பயணிகளால் எடுக்கப்பட்டது.
சென்னை ஒன் செயலி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த இந்நேரத்தில், மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது பயணிகளுக்கு சிரமத்தை அளித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் வரை, நடத்துநர்கள் மூலம் கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
UPI பரிவர்த்தனை, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழியாக செய்யப்படும் பணப் பணப்பரிமாற்றங்களையும் தற்போது ஏற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை ஒன் (Chennai One) செயலியும் தற்காலிகமாகச் செயல்படாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை ஒன் செயலி அறிமுகத்திற்கு வந்த பிறகு, பெரும்பாலான பயணிகள் பேருந்தில் ஏறிய உடனேயே பேருந்தின் கோட் நம்பரை என்டர் செய்து, டிக்கெட் எடுத்து வருகின்றனர். மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு, சென்னை ஒன் செயலியும் செயல்படாது என அறிவித்திருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சென்னை ஒன் செயலியில் பேருந்து மட்டுமின்றி ரயில் டிக்கெட் மற்றும் ஆட்டோக்களை புக் செய்ய முடியும். இந்நிலையில் தற்போது இதில் ரயில் டிக்கெட்டை எடுக்க முடியுமா அல்லது முடியாதா என பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தப் பிரச்சினை வெகு விரைவில் சரி செய்யப்பட்டு, மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை ஒன் செயலி வழக்கம்போல் செயல்படுவதாக MTC விளக்கம் அளித்துள்ளது. தங்கள் பயணங்களுக்கான டிக்கெட்டை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.